

திருவாரூர் மாவட்டம் பெருங்கலைஞர்களின் சொந்த மாவட்டம். அதன் முதல் வரிசையில் இருப்பவர் மு.கருணாநிதி. அவரது ‘அணில் குஞ்சு’ என்கிற கதை இதில் தொகுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இருக்கும் மதவேறுபாட்டைச் சிறார்கள் பார்வையில் இயல்பாக இந்தக் கதை பதிவுசெய்கிறது. ‘செந்நெல்’ நாவல் எழுதிய சோலை சுந்தரபெருமாளின் கதையான ‘மீட்சி’ என்கிற கதையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்து மகனுடன் சிங்கப்பூருக்கு இடம்பெயரும் சங்கரலிங்கம் என்கிற முதியவரின் கதையைச் சொல்கிறது. ஊரில் விவசாயம் பார்ப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறை, விளைச்சலை விஞ்சும் இடுபொருள் செலவு எனப் பல விஷயங்களுடன் இந்தக் கதை திருவாரூர் வட்டார வழக்கையும் பதிவுசெய்கிறது. இரா.காமராசுவின் ‘தாத்தா தொலைந்துபோனார்’ கதையும் இதே பாணியிலானது. விவசாயத்தை நம்பி இருக்கும் சொக்கன் என்கிற முதியவரிடம் அவரது நிலத்தை ஒரு கல்லூரிக்காக வாங்க முயல்கிறார்கள்.