

அது ஒரு பாரம்பரியமான பள்ளி. நம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் கற்றுத்தரும் முன்மாதிரியான பள்ளி. அங்கு நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டுப்பாடான விடுதியில் தங்கி படித்தேன். அந்த இரண்டுங்கெட்டான் வயதில் என்னையொத்த பெண்பிள்ளைகளுடன் தங்கியிருந்தபோது எனக்குக் கிட்டிய அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவடுக்குகளில் இருந்து ஒன்றை உருவுகிறேன். என்
ஆருயிர்த் தோழி நிலா வருகிறாள். இது உண்மைக் கதைதான். நிலாவின் கதை. நிலாவுக்குப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்பிக்கப் போகிறது. தோழிகள் எல்லாரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நிலாவுக்கு மட்டும் படிப்பில் மனம் பதியவில்லை.