

தனியாக வாழலாம்; உள்ளம் தனித்து வாழாது. அதற்குத் துணை தேவை. அன்புசெய்தல் அவசியம். ஆசையாக அது உள்ளத்தில் ஊறும். மணற்கேணிபோல் மனக்கேணி. அதைத்தான் உய்த்துணர்ந்து எழுதி இருக்கிறார் யுகபாரதி. பாரதி, தன் கவிதையில் பாம்புப் பிடாரனைப் பாடினார். பாம்பாட்டியைப் பிடாரன் என்பர். யுகபாரதி, ‘மஹா பிடாரி’ என்கிறார். அது ஒரு மெய்யன்பு. அடங்காப் பிடாரி என்பது இந்நாளில் வசவுச் சொல். ஆதிகாலத்தில் அஞ்சாதவள் என்பதே அதன் பொருள். வீரமகளைக் குறிக்கும் சொல் பின்னர் வசையானது.
பாரதியின் பிடாரன் தொடங்கி, யுகபாரதியின் ‘மஹா பிடாரி’ வரை தமிழ்க் கவிதை அகலப் பருத்துள்ளது. ‘மனுஷக்குமாரியல்லள் மஹா பிடாரி’ எனப் பாடுகிறார் யுகபாரதி. பிடாரி என்பது வேட்டைத் தெய்வம். நாகர் வழிபாட்டின் எச்சம். பீட ஹரி என்றால் அல்லல் அறுப்பவள்.