

நாகப்பட்டினம் தாலுக்கா, கீழ்வெண்மணி கிராமத்தில், 1968இல் அரைப்படி நெல்லுக்கான கூலி உயர்வுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தியாவின் தேசியப் பத்திரிகைகளில் எல்லாம் தலைப்புச் செய்தியாக வந்தது.
‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளிலும் செய்தியாகி, இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. ஆனால், இந்தக் கொடூரச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றங்களில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதம், நீதிமன்றங்கள் இந்த வழக்கை அணுகிய போக்கு முதலானவை பற்றி ‘கீழ்வெண்மணி: மறுக்கப்பட்ட நீதி’ என்ற தலைப்பில் வந்துள்ள நூல் விரிவாக அலசுகிறது.