

திராவிடச் சித்தாந்தத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ‘திராவிட மாயை’ புத்தகத்தின் மூன்று பகுதிகளை எழுதி, அவற்றின் வெற்றியால் ‘திராவிட மாயை சுப்பு’ என்றே அறியப்படும் சுப்புவின் தன் வரலாற்று நூல் ‘சில பயணங்கள்; சில பதிவுகள்’. இந்து மதத்தையும் இந்திய தேசியத்தையும் சமரசமின்றி ஆதரிக்கும் வலதுசாரிச் சிந்தனையாளரான சுப்பு, தனது இந்த வரலாற்று நூலில் தனது குடும்பம், அரியலூர் மாவட்டத்தில் தான் பிறந்து வளர்ந்த வாரியங்காவல் கிராமம், தனது பள்ளி வாழ்க்கை, சிறு வயதிலேயே சென்னை அடையாறில் தனது பெரியப்பா வீட்டுக்கு இடம் பெயர்ந்தது, தனது நண்பர்கள், பார்த்த வேலைகள், செய்த தொழில்கள், தேடல்கள், கண்டடைந்த விஷயங்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு, அரசியல் ஈடுபாடு, பத்திரிகைப் பணி, கட்டுப்பாடு இன்றித் திரிந்து பட்ட கஷ்டங்கள், நண்பர்களால் கிடைத்த சுக துக்கங்கள், ஆன்மிக அனுபவங்கள், மகான்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவை குறித்த ஆசிரியரின் அனுபவங்கள் சுவாரசியமானவை. ஆழமான தேடலும் இயல்பான துடுக்குத்தனமும் நிறைந்த தனது வாழ்க்கையை ஆசிரியர் சுப்பு எவ்வாறு திரும்பிப் பார்க்கிறார் என்பதை இதில் தெரிந்துகொள்ள முடிகிறது.