‘தி இந்து’ குழுமத்தின் இலக்கிய திருவிழா: சென்னையில் நாளை தொடங்குகிறது
சென்னை: ‘தி இந்து’ குழுமத்தின் இலக்கிய திருவிழா(Lit for Life) சென்னை சேத்துப்பட்டு சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் ஜன.18, 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
‘தி இந்து’ குழுமம் சார்பில் இலக்கிய திருவிழா (Lit for Life) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான இலக்கிய திருவிழா- 2025 சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் ஜன.18,19-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இவ்விரு நாட்களிலும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்ச் சூழல், மதம் தோன்றிய வரலாறு, புதுக் கவிதைகள், எழுத்தாளர் சுஜாதாவுடனான அனுபவங்கள், ‘ஆரோக்கியம்: எதிர்காலத்துக் கான வழிகாட்டல்’, கமல்ஹாசனின் சினிமா பயணம், வாழ்க்கை நினைவுகளில் இசையின் தாக்கம் உட்பட பல்வேறு கருப்பொருளில் கருத்தரங்குகள், இலக்கிய உரைகள் நடத்தப்பட இருக்கின்றன.
இவற்றில் பல்வேறு அமர்வுகளில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகை யாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
