

இலக்கியங்கள் வாழ்க்கையைத் திறனாய்வு செய்கின்றன. திறனாய்வுகள் இலக்கியங்களை வாழ்விக்க வைக்கின்றன. இலக்கியத்தை அதன் புலப்பாட்டு நுட்பங்களுடன் பண்பாட்டுப் பெருமதிகளுக்குள் இட்டுச்செல்வது திறனாய்வே. தனிமனிதப் படைப்பான இலக்கியத்தை ஒரு சமூகப் பண்டமாக மாற்றுவது திறனாய்வின் பணியாகிறது. படைப்பு – படைப்பாளன் - நுகர்வு ஆகிய மூன்று தரப்புக்கும் அறிவு - உணர்வுப் பாலமாகத் திறனாய்வு அமைகிறது.
திறனாய்வின் தொடக்கம் ரசனைதான். ஆனால், அதுவே முடிவல்ல. வாழ்க்கையை, அதன் பன்முகக் கோணங்களை வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்பைச் சமூகமயப்படுத்துவது திறனாய்வே. நவீனத் திறனாய்வின் தடங்கள் என்று பார்க்கிறபோது, தொடக்கத்தில் கம்பன், பின்னர் கம்பனில் இருந்து இளங்கோ, அதற்குப் பின்னர் வள்ளுவன் என்று படைப்பாளர்களின் ஆக்கத்திறனில் மையமிட்டது. பின்னர் பாரதி, புதுமைப்பித்தன் வரை அது தொடர்ந்தது.