

தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்று ‘வாடிவாசல்’. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா 1959இல் எழுதிய நாவல் இது. இந்த நாவல், ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் அறியப்பட்ட ஏறு தழுவல் என்கிற தமிழர் விளையாட்டைப் பற்றியது. இந்த விளையாட்டில் இருக்கும் விலங்கும் அதை அடக்கப் போராடும் மனிதர்களின் விலங்குக் குணமும் இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும்.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழ்ப் பண்பாடு சார்ந்த விஷயமும், ஒரு முனையை நோக்கி விறுவிறுப்பாக நகரும் நாவலின் சொல்முறையும், இந்த நாவலை விசேஷமிக்கதாக ஆக்குகிறது. இதே அம்சங்களுக்காகத்தான் இந்த நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் சினிமாவாகும் வாய்ப்பும் பெற்றது எனலாம். அதற்கெல்லாம் முன்னோடியாக இந்த நாவலின் ‘கிராஃபிக் வடிவம்’ இப்போது வெளிவந்துள்ளது.