

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‘சிக்கல்’ என்பது ஓர் ஊரின் பெயர். இங்கு நான் சொல்லவந்த ‘சிக்கல்’ வேறு. ஜெனிட்டா என்கிற ஆறு வயது சிறுமியின் குடலில் ஏற்பட்ட சிக்கல் பற்றியது. ஜெனிட்டா கைக்குழந்தையாக இருந்தபோதே அவளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்துத் தாய்மார்கள் சொல்வதைக் கேட்டு லில்லி டீச்சர் குழந்தையைத் தன் காலில் உட்காரவைத்து மலத்துளைக்குள் முருங்கைக்கீரையின் சிறுகாம்பை விடுவாள். சிறிது நேரத்தில் எவ்வளவு இறுகிப் போயிருந்தாலும் வெளியே வந்துவிடும்.
ஆனால், இப்போதெல்லாம் அவ்வாறு செய்ய ஜெனிட்டா ஒப்புக் கொள்வதில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் காண்பித்தும் பிரயோசனமில்லை. சில மருத்துவர்கள் நீட்டு நீட்டான மாத்திரைகளைக் கொடுத்து மலப்புழைக்குள் வைக்கச்சொன்னார்கள். எதுவும் பலன் தரவில்லை. தினம்தோறும் காலைநேரத்தில் இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் பெரும் மல்லுக்கட்டே நடக்கும். லில்லியைப் போலவே அவள் கணவன் சேவியரும் பள்ளி ஆசிரியர்.