

அரசு கலைக் கல்லூரிகள் பலவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ஆர்.சிவக்குமார். தமிழின் முதன்மையான மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவர். அவர், தனது பணிக்கால அனுபவங்களின் பின்புலத்தில் எழுதியிருக்கும் நாவல் ‘கற்றதால்’. ஓர் எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவன் ஒருவனின் இளமைக் காலத்தையும் முதல் தலைமுறையாக அவன் கல்லூரிக் கல்வி பயின்று மேலெழுந்து வருவதில் அடைந்த பாடுகளையும் விவரிக்கும் அவருடைய முதல் புனைவான ‘தருநிழல்’ நாவலின் தொடர்ச்சியாகவும் இவருடைய இந்த இரண்டாவது நாவலை வாசிக்கலாம்.
இந்நாவல், இவருடைய கற்பித்தல் அனுபவங்களை விவரிப்பதாக மட்டும் நின்றுவிடாமல், கடந்த முப்பது, நாற்பது ஆண்டு கால உயர் கல்விப் புலத்தின் போக்குகள் குறித்த குறுக்குவெட்டானதொரு வரலாறாகவும் ஆங்கிலம், தமிழ்ச் சிறுபத்திரிகை சார்ந்த முன்னோடி எழுத்தாளர்கள் அவர்தம் நூல்களைப் பற்றிய நினைவுப் பதிவுகளாகவும் பல்வேறு உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிறது.
சுய அனுபவங்களைத் தன் புனைவிற்கான கச்சாப்பொருளாகக் கைக்கொள்ளும்போது, பல சமயங்களில் ஆசிரியர் தனது நினைவில் தோய்ந்து மூழ்கியவராக நிகழ்வுகளை உணர்ச்சிப் பெருக்கோடு விவரிக்க முற்படுவார். அது மிகையாக வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சித்திரம்போலாகி நம் கண்ணையும் கருத்தையும் கவராமல் போய்விடுகிற விபத்து நடப்பது உண்டு. ஆனால், ஆர்.சிவக்குமார் ஆங்கில இலக்கியம் போதித்துவந்தவர், அரிதானவையும் அவசியமானதுமான பல அயல் நாட்டு நூல்களை அதன் மேன்மை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர். ஆகவே, தன் புனைவுமொழியை அதிக கவனத்தோடும் கட்டுப்பாட்டோடும் அவர் பயன்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
மறைவாக எங்கோ புதைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தின் புகையும் திரி மாத்திரம் கண்ணிற்குத் தட்டுப்படுவதுபோல இந்நூலில் போகிற போக்கில் சில வரிகள் தென்படுகின்றன. அவற்றை அப்படியே வாசித்துக் கடந்து போகாமல், அதன் முனையைப் பிடித்துச் சுண்டியிழுத்தவாறு பின்தொடர்ந்து, சற்றுத் தொலைவு போனால் தொக்கி நிற்கும் வேறு சில பரிமாணங்களையும் கண்டு வியக்கலாம்.
உதாரணமாக, ‘இவன் தங்கியிருந்த பக்தபுரி அக்ரஹாரத்தில் ஏதோ வேலையாக வந்த ஜமுனாவும் தென்பட்டாள்’ அவ்வளவுதான் அதற்கு முன்னும் பின்னும் ஜமுனாவைப் பற்றிய பேச்சு எதுவும் கிடையாது. சற்றே வறண்ட பிரதேசம் ஒன்றிலிருந்து கும்பகோணம் கல்லூரிக்கு மணமாகாத இளைஞனாகப் பணிபுரியப் போன புதிதில் எழுகிற கூற்று அது. இவ்வரியில் தடுக்கி நின்று கிளைப் பாதை எதிலும் நுழைந்து வழி குழம்பி நின்றுவிடாமல், நாவலின் ஓட்டத்தை மேலே தொடர முடிகிறவர்கள் கர்ம சிரத்தையாளர்தான்.
போலவே இந்நூலில் இடம்பெற்றிருக்கும் 19, 23 ஆகிய அத்தியாயங்களைச் சொல்லலாம். நாவலின் மையச்சரடிற்கு அவ்வளவாகச் சம்பந்தமில்லாத இடையீடு மாதிரி தோன்றும் அவ்விரு அத்தியாயங்களும், அதீதமான உணர்ச்சிப் பெருக்கை உறைய வைத்திருக்கும் ஒரு வித உலர்ந்த மொழிநடையில் எழுதப்பட்டவை. பாதிக்கப்பட்டவர்கள் அடைகிற துயரத்தைப் போலவே அதைக் களைய எதுவும் செய்யவியலாமல், வெறுமனே சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க விதிக்கப்பட்டவர்கள் அடைகிற வேதனையும் குறைவில்லாதது. அவ்விரு அத்தியாயங்களும் அத்தகைய ஊமை வலியை வாசிப்பவர்க்குக் கடத்தவல்லவை.
இடதுசாரி அரசியல் மீதான மனச்சாய்வும் நவீன இலக்கியத்தின் மேல் ஈர்ப்பும் கொண்ட ஓர் இளைஞனுக்கே உரிய விமர்சன நோக்கோடு விரியும் நிகழ்வுகளில் இவரது கசப்பும் கரிப்பும் நேரடியாக அல்லாமல் அங்கதமாக மாறி வெளிப்படுவதைப் பல இடங்களில் காண முடிகிறது. வரித்துக்கொண்ட லட்சியத்திற்கும் வாழக் கிடைத்த நிதர்சனத்திற்கும் நடுவிலான இடைவெளியை எப்படிக் கடக்கிறோம் என்பதுதான் இருப்பிற்கு ஓர் அர்த்தத்தை நல்குகிறது. அந்த அர்த்தமோ ஆளாளுக்கு மாறுபடுகிறது. தன்னனுபவம் சார்ந்தவைதான் என்றாலும், தன் தனிவாழ்க்கையைப் பற்றி விவரிப்பதைப் பேரளவிற்குத் தவிர்த்திருக்கிறார். சுவை கருதி நாடகீயமாக விரித்தெழுத வாய்ப்பிருக்கும் தருணங்களையும்கூட நீட்டி முழக்காமல் குறுக்கமாகவே சொல்லிச் செல்கிறார்.
கற்றதால்
ஆர்.சிவகுமார்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 91-4652-278525
- தொடர்புக்கு: mohankrangan@gmail.com