வாசிப்பின் வாசலைத் திறந்த மாட்டுவண்டி நூலகம் | நூல் வெளி

வாசிப்பின் வாசலைத் திறந்த மாட்டுவண்டி நூலகம் | நூல் வெளி
Updated on
2 min read

இந்தியா​விலேயே முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் கிராமத்தில் எளிய மக்களின் அறிவுக்கண் திறக்கும் திட்டம் தொடங்​கப்​பட்டது. இரட்டை மாட்டு வண்டியில் இருபுறமும் அடைக்​கப்பட்ட அடுக்​கு​களில் நூல்கள் பாடவாரியாக அடுக்​கப்​பட்​டிருந்தன. அதன் வெளிப்​பகு​தியில் அறிவுச் சுவடிகளும், விளக்​கப்​படங்​களும், நீதிக்​கதைப் படங்களும் இடம்பெற்றிருந்தன. ஒலித்​தட்டுக்​களும் வண்டியின் உள்ளே இருந்தன.

இந்த நடமாடும் நூலக மாட்டு​வண்டி சு.வி.க​னகசபையின் அரும் பெரும் முயற்​சியின் விளைவாக மக்களுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்டது. இதனை நூலகத் தந்தை எனப் போற்றப்​படும் எஸ்.ஆர்​.ரங்​கநாதன் தலைமையேற்றுத் தொடங்கி​வைத்​தார். மேலவாசல் தொடங்கி பன்னிரண்டு மைல் சுற்றளவில் இருந்த சுமார் தொண்ணுற்று ஐந்து சிற்றூர்​களுக்கு நடமாடும் நூலக வண்டி சென்றது. நூல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு குறிப்பு அட்டையும் நூல்களில் இடம்பெற்றிருந்தன.

நூல்கள் இலவசமாக வழங்கப்​பட்டன. ஒவ்வோர் ஊரிலும் தன்னார்​வலர்கள் சிலர் ஏற்பாடுகளை ஒழுங்​குசெய்​தனர். தேவையான நூல்களைப் பெற்றுக்​கொண்டு அடுத்த முறை வண்டி வரும்போது திருப்பித் தரும் ஏற்பாடு இருந்தது. இடையில் மிதிவண்டி, மோட்டார் வண்டிகளும் நூல்களைத் தரவும், பெறவும் பயன்படுத்​தப்​பட்டன. நூல்களைக் கிராமங்​களில் பலர் சேர்ந்து வாசிக்கும் வழக்கமும் இருந்தது.

நடமாடும் நூலகத்தில் பெரிய எழுத்துப் புத்தகங்கள், நீதிக் கதைகள், தோட்டக்கலை, தேனீ வளர்த்தல், குடிசைத் தொழில்கள், வருமானத்தை அதிகரிக்கும் வழிகள் போன்ற நூல்கள் இடம்பெற்றன. இவை அனைத்​தையும் உருவாக்கிச் செயற்​படுத்​தியது கனகசபை​தான். “அவர்களை (மக்களை) புத்தகங்​களிடம் அன்பு பாராட்டும்​படிச் செய்ய வேண்டியது, அவர்களுடைய வாழ்க்கையில் புத்தகங்களை இன்றியமை​யாத​தாகச் செய்யும்படி அவர்களுக்கு அறிவூட்ட வேண்டியது” இந்த இரண்டையும் நடமாடும் நூலக இயக்கத்தின் குறிக்​கோள்களாக அவர் குறிப்​பிட்​டார். எளிய, குறைந்த கல்வியறிவு பெற்றவர்​களுக்கு அவர் சொன்னது இது. ஆனால், இன்று அதிகக் கல்வியறிவு பெற்று​விட்ட நிலையிலும் நம் சமூகத்​திற்கு இந்த வாசகங்​களையே சொல்ல வேண்டி உள்ளது.

இந்த எழுத்​தறிவு இயக்கமும் நடமாடும் நூலகமும் சில ஆண்டுகள் நடைபெற்றன. 1935இல் கனகசபையின் உடல்நலம் குன்றிய பின் நடமாடும் நூலகம் படிப்​படியாக நலிவுற்று நின்றும் போனது. பின்னர் தஞ்சை மாவட்டக் கழகம் மோட்டார் காரில், வேனில் நடமாடும் நூல் நிலையத்தைத் தொடங்​கியது. பின்னர் அவ்வாக​னத்தில் பேசும் படம், மருத்​துவச் சிகிச்சை ஆகியன இணைந்​ததால் நூல்களும் வாசிப்பும் பின்னுக்குத் தள்ளப்​பட்டன

மன்னார்குடி நடமாடும் நூலகத்தில் 6,308 நூல்களும் 498 விளக்கப் படங்களும் இடம்பெற்றிருந்தன. இறுதியில் 1953 நூல்களும் 145 விளக்​கப்​படங்​களுமே எஞ்சி​யிருக்​கின்றன. இந்த நடமாடும் நூலகம் பற்றிய தகவல்​களை​யும், படங்களையும் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகர் த.பத்​ம​நாதன் தன் ஆய்வில் முதன்​முதலில் பதிவு செய்தார். அந்த மாட்டு வண்டி நூலகத்தின் மாதிரி வடிவத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்​திற்குள் இடம்பெறச் செய்துள்ளனர்.

மன்னார்குடி கிளை நூலகம் பல்லாண்​டுகளாக நிரந்தர இடமின்றி வாடகை இடங்களில் செயல்​பட்டு வந்தது. தற்போது சு.வி.க​னகசபை தன் பூர்விகச் சொத்திலிருந்து உயில் மூலம் நூலகப் பயன்பாட்​டிற்கு என அளித்த கட்டிடத்தில் இயங்கிவரு​கிறது. நகரின் முக்கியப் பகுதியில் இருக்கும் கோடிக்​கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடம் அது. அந்த நூலகம் கனகசபை நினைவு நூலகமாக முறைப்படி அரசால் அறிவிக்​கப்பட வேண்டும். முதல் நடமாடும் நூலகம் தொடங்​கப்பட்ட மேலவாசல் கிராமத்தில் உள்ள ஊர்ப்புற நூலகம் அடையாளப்​பூவமாக மேம்படுத்​தப்​பட்டுச் செயல்​படுத்​தப்பட வேண்டும்​.

நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 1931

- kamarasuera70@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in