

இயா யான்பெரி ஸ்வீடனைச் சேர்ந்த எழுத்தாளர். 2012இல் அவரது 45ஆவது வயதில், முதல் நாவலின் மூலம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். அதற்குப் பின் ஒரு நாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் நாவலிலிருந்தே கவனம் பெற்ற எழுத்தாளர் இவர். இவரது மூன்றாவது நாவலான ‘விவரணை’ புக்கரின் இறுதிப் பட்டியலில் நுழைந்தது மட்டுமன்றி, ஸ்வீடனின் ஆறு இலக்கிய விருதுகளின் இறுதிப் பட்டியலுக்குச் சென்றது; அவற்றில் ஒரு விருதை வென்றும் இருக்கிறது.
கடுங்காய்ச்சலில் விழுந்த பெண், அவரது கடந்த காலத்தில் முக்கியப் பங்கு வகித்துப் பின் பிரிந்த நான்கு பேருடனான நினைவுகளை மனதிற்குள் மறுபடியும் மீட்டிப் பார்ப்பதே இந்த நாவல். நோய்மையில் மனம் இளகுகிறது. தனிமை அந்த இளக்கத்தைக் கூட்டுகிறது. ஆனால், கதைசொல்லி, பிரிந்த உறவுகளிடம் சற்று வேறுவிதமாக நடந்துகொண்டிருக்கலாம் என்று யோசிக்கவில்லை. வெறுமனே நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார். ஏனென்றால், இந்த நான்கு உறவுகளிலுமே முடிவுசெய்யும் சக்தியாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை.
வெற்றிகரமான எழுத்தாளராக வர வேண்டும் என்று விரும்பிய பெண்ணுக்கு, அனுகூலம் என்று சொல்லப்போனால் அவரது கூர்நோக்கும், விவரணைகளை மீண்டும் நினைவுகூரும் ஆற்றலும்தான். பெண் பார்வையில் நகரும் இந்தக் கதையில், தான் செய்தவற்றிலோ மற்றவர்கள் நடந்துகொண்டதிலோ இது சரி, இது தவறு என்ற அறுதியிட்ட முடிவுகளை அந்தப் பெண் கொடுக்கவில்லை. மாறாக, நுட்பமான விவரணைகளை வழங்கி வாசகரை ஒரு முடிவுக்கு வந்துகொள்ளும்படி செய்கிறார்.
பல காலமாக எடுத்திராத புத்தகத்தைச் சட்டென்று எடுத்துப்பார்க்கும் ஆவல் ஏதோ சில நினைவுகளால் வருவது இயல்பு. ஒரு நோயின்போது தோழி யோஹன்னா பரிசளித்த நூலின் முன்பக்கம் அவள் எழுதிய வரிகளைப் பல வருடப் பிரிவிற்குப் பின் இன்னொரு நோய்ப் பாதிப்புக் காலத்தில் வாசித்துப் பார்க்கிறார். உறவின் ஈரம் காய்ந்து தடம்தெரியாது அழிந்துபோன பின்னரும் நினைத்துப் பார்க்க நிறையவே இருக்கிறது.
நிக்கியுடனான உறவு என்பது பெரிய சக்கரத்தின் எதிர்ப்புறம் அளவில் சிறிய சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு வண்டியைப் போன்றது. தட்பவெப்பநிலைபோல் சட்டென்று மாறும் குணமுடையவள் நிக்கி. அவ்வுறவு அவ்வளவு காலம் நீடித்ததே அதிசயம்தான். அலெஹண்ட்ரோ ஒருவன் மட்டுமே நினைவில் வரும் ஆண். அவன் குறித்த அத்தியாயத்திலும் அவனைப் பற்றியதைவிட மற்றவர்கள் குறித்த விவரணைகள் அதிகம். ஆனால், கதைசொல்லி மறக்க இயலாத ஒன்றை அவன் விட்டுச்சென்றதே, அவன் நினைவுகூரப்பட முக்கியக் காரணம்.
பிரிகிடா கதைசொல்லியின் தாய் என்பது ஆரம்பத்தில் சொல்லப்படுவதில்லை. தொடர் பதற்றப் பீதிகளால் (Panic attacks) பாதிக்கப்பட்டவளின் மகளாக வளர்வது என்பது வித்தியாசமான அனுபவம். மற்ற மூன்று கதாபாத்திரங்களிலிருந்து வித்தியாசப்பட்டு பிரிகிடா கதாபாத்திரத்தைப் பார்வையாளரின் கோணத்தில் குணாதிசயச் சிதறல்களாகக் கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர்.
நம்முடைய ஒரே வாழ்க்கையில், உண்மையில் பல வாழ்க்கைகளை வாழ்கிறோம். அலுவலகத்தில் எல்லோருக்கும் கீழ்ப்படிந்து அமைதியானவனாக இருக்கும் ஒருவன், வீட்டில் மனைவியை மிரட்டி அவளைக் கதிகலங்கச் செய்பவனாக இருக்கிறான். நம் வாழ்க்கையில் பலர் வருகின்றனர்; போகின்றனர். சிலர் மட்டுமே அவர்களது தடங்களை நம்முள் பதித்துச் செல்கின்றனர். தடங்கள் நமக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்போதும் இனிமையானவையாக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை.
இருவரின் உறவில் ஒருவர் வாழ்க்கையை முன்னோக்கிப் பார்ப்பதுவும் மற்றொருவர் பின்னோக்கிப் பார்ப்பதுமாக இருந்தால், அந்த உறவு எவ்வளவு நாள் நீடிக்கும்? இந்த நாவல் ஒரு நினைவுப் பயணம். நாம் வெட்டவெளியை உற்றுநோக்கியபடி சற்றுநேரம் இருந்தால் நினைவுகளில் எத்தனை பேர் நீந்துகிறார்கள்? சாதாரண உறவுகளின், சாதாரண நிகழ்வுகளின் அசாதாரணத்தை இயா இந்த நாவலில் கொண்டுவந்திருக்கிறார்.
இயாவின் மொழிநடை மிகையுணர்வு இன்றி, நுட்பமான உணர்வுகள் அடங்கிய தொனியில், விமர்சனங்களின்றி, ஒரு வாழ்க்கையின் சில பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இருபதுகளில் நடந்தவற்றை மத்திய வயது கடந்து மறுபரிசீலனை செய்தால், பாதிக்கு மேல் முட்டாள்தனம்தான். ஆயினும் பிறிதொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதே வயதில், அதே சாலையில்தான் பயணிக்கப் போகிறோம். நல்ல நூல்கள் ஆங்கிலத்தில் வெளியான அதே வருடத்தில் தெளிவான மொழிபெயர்ப்புடன் தமிழில் கிடைப்பது அரிது. இந்த நூல் வழி அது சாத்தியமாகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
விவரணை
இயா யான்பெரி
(தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி)
டூ ஷோர்ஸ் பிரஸ்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8903665360
- தொடர்புக்கு: sarakavivar@gmail.com