

உலகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகளை 2003இல் சந்தித்த போப் இரண்டாம் ஜான் பால், கிறிஸ்துவ சமயத்தினரின் சமூகப் பொறுப்புகள் குறித்துப் பேசினார். அப்போது தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றின் ஆயர்களிடம் அவர் அறிவுறுத்தியதன் சாரம் இது: ‘சாதிய உணர்வு கிறிஸ்துவச் சமயத்தின் கொள்கைக்கு எதிரானது; ஆன்மிகத்துக்கு முரணானது; திருச்சபையின் நற்செய்திப் பணிக்குத் தடையானது. சமூகத்தின் பிற மக்களிடமிருந்து தலித்துகள் ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்’. போப் கவனத்துக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைதான், அதற்குப் பிறகும் நீடிப்பதை ‘கிறிஸ்தவத்தில் ஜாதி’ என்னும் இந்நூல் பதிவுசெய்கிறது.
இதன் ஆசிரியர் நிவேதிதா லூயிஸ் கள ஆய்வுகள் வழிப்பட்ட தகவல்களுடன் தனது கருத்துகளை முன்வைக்கிறார். திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களுக்குச் சென்று, மக்களை நேரடியாகச் சந்தித்துப் பெற்ற செய்திகளை அந்த மக்களின் மொழியிலேயே அவர் இதில் பதிவாக்கியுள்ளார். ஒரே சமயத்தைப் பின்பற்றினாலும் பட்டியல் சாதியினரிடம் இடைநிலைச் சாதியினர் காட்டும் பாகுபாடுகள் பிடிவாதமாகத் தொடரும் அவலத்தை இந்த நூல் கூறுகிறது.
பட்டியல் சாதியினர் பங்குப் பேரவை உறுப்பினர் ஆவதற்கு மறுக்கப்படுதல், அவர்கள் கோயில் வரி கட்ட மறுக்கப்படுதல், பட்டியல் சாதியினருக்காகத் தனியாகத் தேர்த் திருவிழா நடத்த கட்டாயப்படுத்தப்படுதல், இடைநிலைச் சாதியினர் நடத்தும் திருவிழாவில் தேர், பட்டியல் சாதியினர் வசிக்கும் தெருக்களுக்கு வரத் தடை என்பது போன்ற சமய நடைமுறைகள் மட்டுமல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்குக்கூடத் தேவாலயக் கதவுகள் தங்களுக்கு அடைக்கப்படுவதைப் பட்டியல் சாதியினர் பலர் இந்த நூலில் பகிர்ந்துகொள்கின்றனர்.
இறந்த பட்டியல் சாதி கிறிஸ்துவர்களின் சடலங்களைத் தேவாலயத்துக்குள் இறுதிப்பூசைக்கு ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பது இல்லை; பட்டியல் இனத்தவருக்குப் பொதுக் கல்லறையும் மறுக்கப்படுகிறது. பெருங்கொதிப்பைப் பல்லாண்டுக் காலமாக அனுபவித்தாலும், பேதங்கள் அன்றாட நிகழ்வாகி, உணர்வு மரத்துப்போன தொனியில் பாதிக்கப்பட்டோர் சிலர் பேசுவது, வாசகர்களுக்குப் பாரத்தை ஏற்றுவதாக உள்ளது. ஊரைவிட்டே வெளியேறிவிட்ட பட்டியல் சாதியினப் பெரியவர் ஒருவர், “முன்பெல்லாம் எங்க மேல ஏதும் தப்பு சொன்னாங்கன்னா காலில் விழுவோம். பிரச்சினை முடிஞ்சிரும்” எனப் பல ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைப் பகிர்ந்துகொள்வது ஓர் உதாரணம்.
பட்டியல் சாதியினத்தவர் கிறிஸ்துவச் சமயத்துக்கு மாறிய பின்னரும், கோயில் திருவிழாக்களில் மேளம் அடிக்கச் சாதி இந்துக்களால் வற்புறுத்தப்படுவதும் சில ஊர்களில் நடக்கிறது. இதற்கு அவர்கள் மறுத்தாலும் உடன்பட்டாலும் ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு அது கசப்பான அனுபவமே. புகலிடம் தேடிப் போன இடத்திலும் வேறுபாடு, பழைய இடத்திலும் மாறாத வேறுபாடு என இருதலைக் கொள்ளி எறும்புகளாகப் பட்டியல் சாதியின மக்கள் படும் துயரத்துக்கு இந்நூல் ஓர் ஆவணமாக உள்ளது.
தலித் செயல்பாட்டாளர்களான மேரி ஜான், சகோதரி அல்போன்சா, தந்தை மாற்கு, திண்டுக்கல் மனோகரன், தந்தை எல்.யேசு மரியான் ஆகியோரின் நேர்காணல்களின்வழி தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. மிகக் கனமான பேசுபொருளை ஆய்வுக் கட்டுரைக்கான அயர்ச்சியூட்டும் வடிவத்தில் அல்லாமல், ஒரு பயணக் கட்டுரையின் இலகுவான நடையில் ஆசிரியர் தந்திருப்பது வாசகர்களோடு எளிதில் நெருக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கிறிஸ்தவத்தில் ஜாதி
(கள ஆய்வுகளும் நேர்காணல்களும்)
நிவேதிதா லூயிஸ்
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.750
தொடர்புக்கு: 75500 98666
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in