நூல் வெளி: பொருநையின் கதை வெள்ளம்

மகாகவி பாரதியார், வ.வே.சுப்பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்பித்தன்
மகாகவி பாரதியார், வ.வே.சுப்பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்பித்தன்
Updated on
2 min read

ஒரு நூற்றாண்டைக் கடந்தும் செழுமையோடு தொடரும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாக விளங்கிய மகாகவி பாரதி​யார், வ.வே.சுப்​பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்​பித்தன் ஆகியோர் திருநெல்​வேலியைச் சேர்ந்​தவர்​கள்​தான். இந்த மரபின் தொடர்ச்​சியாக இன்றைக்கும் தமிழ்ச் சிறுகதையில் தனித்து​வத்​துடன் எழுதிவரும் நெல்லைச் சீமையைச் சேர்ந்த 73 சிறுகதை​யாளர்​களின் கதைகள் ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கதைகள்’ எனும் தலைப்பில் பெருந்​தொகுப்பாக வெளிவந்​துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆண்டு​தோறும் நடத்திவரும் பொருநை விழா, பொருநை – நெல்லை புத்தகத் திருவிழா ஆகிய நிகழ்வுகளை ஒட்டி, எழுத்​தாளர் இரா.நாறும்​பூநாதன் தலைமையிலான குழு தொகுத்​திருக்கும் நூல் இது. நெல்லை மாவட்ட எழுத்​தாளர்​களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு என்றாலும், ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ச் சிறுகதையின் போக்கினைப் பிரதிபலிப்பதாக உள்ளது இந்தத் தொகுப்பு.

தமிழ்ச் சிறுகதைக்கு வலுவான தளம் அமைத்த ‘மணிக்​கொடி’ இதழ் தொடங்கி, தனது காத்திரமான கதைகளால் பங்களிப்பு செய்து​வரும் நெல்லை மாவட்ட எழுத்​தாளர்​களின் சிறுகதைகளை மொத்த​மாகப் படிக்கை​யில், பிரமிப்​பாகவும் தமிழ்ச் சிறுகதைக்கு வளம்சேர்க்கும் இவ்வளவு எழுத்​தாளர்கள் நெல்லைச் சீமையில் இருக்​கிறார்களா என்கிற வியப்பும் மேலிடு​வதைத் தவிர்க்க முடிய​வில்லை.

தமிழின் முதல் சிறுகதை​யாகச் சொல்லப்​படும் வ.வே.சுப்​பிரமணி​யத்தின் ‘குளத்​தங்கரை அரசமரம்’ 1915இல் (‘விவேக போதினி’) எழுதப்​பட்டு, 1917இல் நூலாக வெளியானது. அந்தக் கதை எழுதப்​படு​வதற்கு இரண்டு ஆண்டு​களுக்கு முன்பே, 1913இல் ‘ஆறிலொரு பங்கு’ எனும் கதையைப் பாரதியார் எழுதி​யுள்​ளார். சிறுகதை இலக்கணத்​திற்குப் பொருந்தி வராத பாரதி​யாரின் கதையைத் தமிழின் முதல் சிறுகதை​யாகப் பலரும் ஏற்காத நிலையில், இந்த நூலின் முதல் கதையாக ‘ஆறிலொரு பங்கு’ம், இரண்டாவதாக அ.மாதவை​யாவின் ‘நரி பரியான அற்புதம்’ என்கிற கதையும் சேர்க்​கப்​பட்​டிருப்​பதும் கவனங்​கொள்​ளத்​தக்கது.

நெல்லை மண்ணின் தொடக்கக் கால எழுத்​தாளர்​களோடு, தமிழகம் அறிந்த எழுத்​தாளர்களாக விரிந்த தளத்தில் அறியப்பட்ட கு.அழகிரி​சாமி, வல்லிக்​கண்ணன், கி.ராஜநாராயணன், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் ஆகியோரை முதல் தலைமுறை​யின​ராக​வும், தற்போதும் எழுதிவரும் பூமணி, வண்ணதாசன், கலாப்​ரியா, சோ.தர்மன், மாலன், ச.தமிழ்ச்​செல்வன் உள்ளிட்டோரை இரண்டாம் தலைமுறை​யாக​வும், மாரி செல்வ​ராஜ், ஜா.தீபா, வேலாயுத முத்துக்​குமார் ஆகியோரை மூன்றாம் தலைமுறை​யாகவும் கொண்டால், மூன்று தலைமுறை எழுத்​தாளர்​களின் தேர்ந்​தெடுக்​கப்பட்ட சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் மலர்ந்​துள்ளது.

73 எழுத்​தாளர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு என்பதால், ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஏதேனும் ஒரு நிகழ்​வினைத் தனக்கான தனித்து​வத்​துடன் சொல்வதில் வெற்றியடைந்​துள்ளன. ஒவ்வொரு எழுத்​தாளரும் அவரவருக்கான தனியான மொழியில் கதைகளை எழுதி​யுள்ள விதமும், கதையைச் சொல்லிச் செல்வதில் உள்ள நேர்த்தியும் வாசகரைக் கதைகளுக்கு நெருக்​க​மாகக் கொண்டு​வந்து நிறுத்து​கின்றன.

ஆண்டிப்பகடையின் மகளான பொம்மியை முன்வைத்து டி.செல்​வராஜ் எழுதி​யுள்ள ‘கற்புநிலை’ கதையின் முடிவில், பத்ரகாளியைப் போல் வெகுண்​டெழுந்த பொம்மி, “என்னையெத் தேவடி​யாளிண்ணாடா நெனச்​சுக்​கிட்டே?” என்று ஆங்காரத்​துடன் கேட்பதும், வண்ணதாசனின் ‘நிலை’ கதையில் வரும் கோமு, எதுவும் பேசாமல் தேர் நிலையத்​துக்குள் வருவதையே பார்த்​துக்​கொண்​டிருப்​பதும், ஆர்.என்​.ஜோடி குரூஸின் ‘அக்கா’ கதையில் வரும் சுமதியும் வேறுவேறு உணர்வுகளை வாசகருக்குள் கடத்து​வதோடு, பெண் மனவுலகைக் கண்டடைய உதவும் கனிவான கதைகளாக உள்ளன.

கலாப்​ரி​யாவின் ‘சித்திர புத்தன்’, ஏக்நாத்தின் ‘செவலைகள் தொலைந்த இடம்’, ஹரன் பிரசன்​னாவின் ‘வசியம்’, கார்த்திக் புகழேந்​தியின் ‘உடுப்பு’ உள்ளிட்ட பல கதைகள், தமிழ்ச் சிறுகதையின் பரந்த வெளியைக் குறுக்கு​வெட்டுப் பார்வையில் பதிவுசெய்யும் கதைகள் என்று சொல்லலாம்.

இந்நூலில் இடம்பெற்றிருக்கும் 73 எழுத்​தாளர்​களில் கமலா விருத்​தாசலம், காஞ்சனா ஜெயதிலகர், தமயந்தி, ஆண்டாள் பிரியதர்​ஷினி, அகிலா, ஜா.தீபா, முத்துலட்சுமி என ஏழு பெண் எழுத்​தாளர்​களின் கதைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இவ்வளவு எழுத்​தாளர்கள் நிறைந்​துள்ள நெல்லைச் சீமையில் பெண் எழுத்​தாளர்​களின் எண்ணிக்கை என்பது ஒற்றை​யிலக்க எண்ணிக்கையில் இருப்பது வரும் காலத்​திலாவது அதிகரிக்க வேண்டும். இதிலும், அறியப்பட்ட பெண் எழுத்​தாளர்களான பிரேமா அருணாசலம், இந்திர பவானி, புதிய மாதவி ஆகியோரின் கதைகளை சேர்த்திருந்தால் முழுமையான தொகுப்பாக இருந்​திருக்​கும்.

ஒவ்வொரு எழுத்​தாளரின் சிறந்த கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. இக்கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கும் எழுத்​தாளர்கள் நாறும்​பூநாதன், கிருஷி, செளந்தர மகாதேவன், மருத்​துவர் வேங்கடப்பன், பாலமுருகன், ராஜூ, பாஞ்சாலி ஆகியோரை​யும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நெல்லை மாவட்ட அரசு நிர்வாகத்​தையும் எவ்வளவு பாராட்​டி​னாலும் தகும்.

இப்படியாக மாவட்டப் படைப்​பாளர்​களின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என மலரும் படைப்பு நினைவுகளாக ஒவ்வொரு மாவட்​டத்தில் இருந்தும் வரும் நாள்களில் வெளிவரு​வதற்கான முன்வரவாக வெளிவந்​துள்ளது இத்தொகுப்பு.

நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்
நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியீடு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 99521 44361

- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in