நூல் வெளி: நிலத்தின் வாசனை

நூல் வெளி: நிலத்தின் வாசனை
Updated on
2 min read

க​விஞர் சேரனின் இத்தொகுப்பில் நூற்றிரண்டு கவிதைகள் உள்ளன. அவை காதலை, பிரிவை, போரின் அழிவை, அகதி வாழ்க்கையின் அவலங்களை, உலக அரசியலை, ஈழத்தின் இறுதிப் போருக்குப் பிந்தைய நிலையை, தனிமனிதத் துயரத்தை, மரணத்தை, வாழ்வை என அனைத்​தையும் காலத்தின் சாட்சி​ய​மாகப் பதிவு செய்திருக்​கின்​றன.

​காஞ்சி என்பது திணை எனக் கொள்ளலாம் என்கிறார். ஆனால், காஞ்சி என்பதற்குப் பல விளக்​கங்களை இந்தத் தொகுப்பின் மூலம் சேரன் சொல்கிறார். சேரனின் கவிமொழி, நுண்ணுணர்வும் அழகியலும் நயமும் சொல்நேர்த்தியும் கூடியது. பல தூய தமிழ்ச் சொற்கள் கவிதைகளில் இயல்பாகக் கையாளப்​பட்​டிருக்​கின்றன. மனித வாழ்வின் பாடுகள்தான் அவரது பாடுபொருள். புலம்​பெயர்ந்து, சொந்த நாட்டை மறக்க இயலாத ஒரு கவிமனம் வேறெதைப் பாடும்? இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு கவிதையும் படித்து உடனடி​யாகக் கடந்து சென்றுவிட முடியாதவை. அத்தனை அவலமும் துயரமும் நம்மை உறையவைக்​கின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘தீராதது’, ‘இந்தத் தெருவில் எப்போதும்’, ‘படையாள் பாடல்’, ‘கடிதங்​கள்’, ‘கிளிப்​பாட்டு’, ‘பழங்கள்’ என்ற ஆறு பிரிவு​களாகப் பிரிக்​கப்​பட்​டிருக்​கின்றன. எனினும் காதல், காமம், போர், அழிவு, பிரிவு என்ற உணர்வுகள் அனைத்துப் பிரிவு​களிலும் விரவிக்​கிடக்​கின்றன. துயரங்களை எப்படிப் பிரித்​தாலும் அவை தரும் உணர்வுகள் ஒன்று​தானே. ‘இந்தத் தெருவில் எப்போதும்’ என்ற தலைப்பில் உள்ள கவிதைகள் நேரடியாக ஈழப்போரின் பின்புலத்​துடன், காட்சிச் சித்திரங்​களாகப் பதிவு பெற்றுள்ளன. அவற்றின் யதார்த்தம் நமக்குப் பேரதிர்ச்​சியைக் கொடுக்​கிறது.

<em><strong>சேரன்</strong></em>
சேரன்

‘படையாள் பாடல்’ உலக அளவில் தற்காலத்தில் நிகழும் போர்க் காட்சிகளைப் பதிவுசெய்​கிறது. மனித உணர்வு​களை​யும், அடிப்படை உரிமை​களையும் கேள்விக்கு உள்ளாக்கும் கொடும்போர் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்​களைக் கவிதை வரிகளில் அவ்வளவு நுட்பத்​துடன் செதுக்க முடிவதே சேரனின் தனித்துவம். ‘திரும்பிப் பார்க்க முடிய​வில்​லை/மற்​றவர்களது உயிரை அழிக்க ஒரு சிறு பொழுது/எனக்​கோ/தொடர்ந்து ஊறும் கொடுங்​க​ன​வில்​/இருந்​தாலும் அழிகிறேன்’ என்ற கவிதையில் கருணை​யற்றுக் கொலைகள் புரியும் ஒரு படைவீரனின் மனச்சாட்​சியாக கவிதை ஒலிக்​கிறது. அது கவிஞனின் கையறு நிலையாகவும் இருக்​கலாம்.

புலம்​பெயர்ந்து வாழும் எவரின் மனதிலும் அழிக்க முடியாத அவர்களின் பூர்விக நிலத்தின் தொன்ம வாசனை ஈரமாக இருக்​கும். அதற்குச் சாட்சியாக சேரனின் கவிதைகள் இருக்​கின்றன. சேரனின் மொழிநய​மும், சொல்தேர்​வும், சொல்முறையும் அவரது கவிதைகள் புலப்​படுத்தும் கருத்​தி​யலுக்கு நிகரானது. இந்தக் கவிதைகளில் ஒப்பனைகளோ கூச்சல்களோ இல்லை. இன்னும் சொல்வதென்​றால், அது நிசப்த மொழியின் இறைஞ்​சுதலாக, கோரிக்கையாக, கேள்விகளாக நம்மைப் பெரும் அலைக்​கழிப்​புக்கு உட்படுத்து​கின்றன.

‘மறுமொழி’ என்கிற கவிதையில் ‘இத்தனைக்கும் பிறகும் எப்படிச் சிரிக்​கிறீர்​கள்?’ என்று கவிஞனைப் பார்த்துத் தொடுக்​கப்​படும் கேள்விக்கு நேரடி​யாகக் கவிதையில் மறுமொழி இல்லை. ஆனால், கவிதையின் தொடக்​கத்​திலேயே அதற்கான மறுமொழி இருக்​கிறது. அதைக் கவனிக்கச் சற்று நேரமும் நேயமும் நமக்குத் தேவைப்​படு​கிறது. அதற்காகவாவது அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு ‘காஞ்சி’.

‘என் கவிதைகளுக்கு மணற்றிடரையோ கடலோரக் காணித்​துண்டையோ பரிசளிக்க வேண்டாம்/ஒரு முள்முருக்கம் பூவைத்தான் கேட்டேன்’ - மொத்தத் தொகுப்​பையும் பலமுறை வாசித்த பின்பு, சேரனின் இந்த வரிகள் மனதிற்குள் சுழன்​றடித்​துக்​கொண்டே இருக்​கின்றன. ஒரு கவிஞனுக்கு நிலமோ பொருளோ அல்ல. வாசகர் மனதில் ஓர் இடம், அதைத்தான் ஒவ்வொரு கவியும் காலத்​திடம் கோருகிறார். அது சேரனுக்கு என்றும் இருக்​கும்​.

காஞ்சி

சேரன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 04652 278525சேரன்

- தொடர்புக்கு: narumugaikuppuswamy@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in