

ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்பதையும், அவனது மரணத்திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்களையும் பேசுகிறது கவிப்பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல்.
ஊதுபத்தி உருட்டும் தொழிலாளர்களின் மன, உடல் வலியையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் பதிவுசெய்திருக்கிறது இந்த நாவல். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஊதுபத்தி உருட்டுவதும் அந்த இன்னல்களை அனுபவிப்பதும் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்த நாவல் மிகத் தெளிவாக அதை முன்வைக்கிறது.
நாவலில் வருகிற மூன்று பெண்களுமே ஊதுபத்தி உருட்டுகின்றனர். இரவில் ஊரே உறங்கினாலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் வத்தி மணைகளில் உட்கார்ந்து இவர்கள் ஊதுபத்தி உருட்டுகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம், வேறெந்த அன்றாட அவசியங்களையும் அவர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்கிறது. அதனால், மற்றவர்களின் நிலங்களில் கிடைக்கும் கேட்பாரற்ற கீரைகளைப் பறித்து வந்து, அவற்றைக் கடைந்து தின்கின்றனர். அந்தக் கீரைகளைப் பறிக்கும்போதுகூட தோட்டங்களில் காய்த்திருக்கிற கத்தரிக்காய், மிளகாய், தக்காளி என எதையும் பறித்துக்கொள்ளாமல் அதிலும் ‘அறம்’ காக்கிறாள் ராணி.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் கங்காதரன், கடிகாசலம் என்பவரின் இரண்டாவது மனைவியான பூச்சியம்மாவின் மகன். பூச்சியம்மாள், தன் வாழ்க்கை முழுவதும் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கைவிடாத வலிமையான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆட்டக் கலைஞனான தன் ஒரே மகனையும் இழந்த பிறகு, பேரன் நிமிர்ந்துவிட்டால் தானும் நிமிரலாம் என்கிற நம்பிக்கையில் பத்தி உருட்டுகிறார்; அந்தக் கனவும் கானல் நீராகிவிட, உழைப்பை மட்டுமே ஊன்றுகோலாகக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார் கூன் விழுந்த அந்தக் கிழவி.
கங்காதரனின் மனைவி ராணி தனக்கு ஏதோ ஒரு பெரிய நோய் வந்துவிட்டதை அறிந்து தவிக்கும்போதும், தன்னைவிடத் தன் மாமியாரான பூச்சியம்மாவை நினைத்தே கவலை கொள்கிறார். கிழவிக்கு ஏதாவது ஒரு வழியைக் காட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்று துடிக்கிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிற ராணி, கடைசியாகத் தன் மகள் ஆதிலட்சுமியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் செல்கிறார். தனது நோய் பேத்திக்கும் ஒட்டிக்கொண்டு விடுமோ என்கிற அச்சத்தில், தள்ளி நின்றே குழந்தையைக் கொஞ்சுகிறாள்.
ஆனாலும் தன் மகளை விட்டுப் பிரிகிற அந்தக் கடைசி நொடியில், ஆவேசத்தோடு மகளைக் கட்டியணைத்துக் கொள்கிறாள். பெண்களுக்குள்ளான ஒரே ஒரு தொடுகையாக நாவலில் வருகிற அந்த அணைப்பு நிகழ்கிறபோது நாமும் உடைந்துபோகிறோம். ஆண் படைப்பாளர் ஒருவர் பெண்ணின் உணர்வை நுட்பமாக எழுதியிருக்கும் விதத்திலும் இந்த நாவல் முக்கியமானது.
‘குளிர் காலத்தில் பாட்டிலுக்குள் கட்டியாகக் கட்டிக்கொள்கிற தேங்காய் எண்ணெயைப் போன்றவர்கள் பெண்கள். லேசாக வெப்பம் பட்டாலே தண்ணீராக உருகிவிடுவார்கள்...’ என ஆடு மேய்க்கும் அல்லிமுத்து சொல்கிறார். ஆனால், அதே பெண்கள்தான் பெரும் மனவலிமை கொண்டவர்களாகவும் இந்த நாவல் முழுவதும் வலம்வருகிறார்கள். இந்த நாவலின் பெரும் பலம் அதன் வட்டார வழக்கு. அது கதை மாந்தர்களுடன் நம்மை மேலும் அணுக்கமாக்குகிறது. இப்படிப் பல அம்சங்கள்வழி மூன்று தலைமுறைப் பெண்களின் வலியை நமக்குள் கடத்தும் நேர்மையான படைப்பு ஜிகிட்டி.
ஜிகிட்டி
கவிப்பித்தன்
தடாகம் வெளியீடு
விலை: ரூ.380
தொடர்புக்கு: 98400 70870
- தொடர்புக்கு: niveditalouis@gmail.com