நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி

நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி
Updated on
2 min read

ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்​ப​தை​யும், அவனது மரணத்​திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்​களையும் பேசுகிறது கவிப்​பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல்​.

ஊதுபத்தி உருட்டும் தொழிலா​ளர்​களின் மன, உடல் வலியையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் பதிவுசெய்திருக்​கிறது இந்த நாவல். வட ஆர்க்காடு மாவட்​டத்தில் உள்ள பெண்கள் ஊதுபத்தி உருட்டு​வதும் அந்த இன்னல்களை அனுபவிப்​பதும் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாகப் பேசப்​பட​வில்லை. இந்த நாவல் மிகத் தெளிவாக அதை முன்வைக்​கிறது.

நாவலில் வருகிற மூன்று பெண்களுமே ஊதுபத்தி உருட்டு​கின்​றனர். இரவில் ஊரே உறங்கினாலும் தெருவிளக்கு வெளிச்​சத்தில் வத்தி மணைகளில் உட்கார்ந்து இவர்கள் ஊதுபத்தி உருட்டு​கிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம், வேறெந்த அன்றாட அவசியங்​களையும் அவர்களால் நினைத்துப் பார்க்​கவும் முடியாமல் செய்கிறது. அதனால், மற்றவர்​களின் நிலங்​களில் கிடைக்கும் கேட்பாரற்ற கீரைகளைப் பறித்து வந்து, அவற்றைக் கடைந்து தின்கின்​றனர். அந்தக் கீரைகளைப் பறிக்​கும்​போதுகூட தோட்டங்​களில் காய்த்​திருக்கிற கத்தரிக்​காய், மிளகாய், தக்காளி என எதையும் பறித்​துக்​கொள்​ளாமல் அதிலும் ‘அறம்’ காக்கிறாள் ராணி.

ஒடுக்​கப்பட்ட சமூகத்​திலிருந்து வரும் கங்காதரன், கடிகாசலம் என்பவரின் இரண்டாவது மனைவியான பூச்சி​யம்​மாவின் மகன். பூச்சி​யம்​மாள், தன் வாழ்க்கை முழுவதும் உழைப்​பையும் தன்னம்​பிக்கை​யையும் கைவிடாத வலிமையான கதாபாத்​திரமாக இருக்​கிறார். ஆட்டக் கலைஞனான தன் ஒரே மகனையும் இழந்த பிறகு, பேரன் நிமிர்ந்​து​விட்டால் தானும் நிமிரலாம் என்கிற நம்பிக்கையில் பத்தி உருட்டு​கிறார்; அந்தக் கனவும் கானல் நீராகிவிட, உழைப்பை மட்டுமே ஊன்றுகோலாகக் கொண்டு வாழ்க்கையை நகர்த்து​கிறார் கூன் விழுந்த அந்தக் கிழவி.

கவிப்பித்தன்
கவிப்பித்தன்

கங்காதரனின் மனைவி ராணி தனக்கு ஏதோ ஒரு பெரிய நோய் வந்து​விட்டதை அறிந்து தவிக்​கும்​போதும், தன்னை​விடத் தன் மாமியாரான பூச்சி​யம்மாவை நினைத்தே கவலை கொள்கிறார். கிழவிக்கு ஏதாவது ஒரு வழியைக் காட்டி​விட்டுச் செல்ல வேண்டும் என்று துடிக்​கிறார். தற்கொலை செய்து​கொள்ள முடிவெடுக்கிற ராணி, கடைசி​யாகத் தன் மகள் ஆதிலட்​சுமியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் செல்கிறார். தனது நோய் பேத்திக்கும் ஒட்டிக்​கொண்டு விடுமோ என்கிற அச்சத்​தில், தள்ளி நின்றே குழந்​தையைக் கொஞ்சுகிறாள்.

ஆனாலும் தன் மகளை விட்டுப் பிரிகிற அந்தக் கடைசி நொடியில், ஆவேசத்தோடு மகளைக் கட்டியணைத்துக் கொள்கிறாள். பெண்களுக்​குள்ளான ஒரே ஒரு தொடுகையாக நாவலில் வருகிற அந்த அணைப்பு நிகழ்​கிறபோது நாமும் உடைந்​து​போகிறோம். ஆண் படைப்​பாளர் ஒருவர் பெண்ணின் உணர்வை நுட்பமாக எழுதி​யிருக்கும் விதத்​திலும் இந்த நாவல் முக்கிய​மானது.

‘குளிர் காலத்தில் பாட்டிலுக்குள் கட்டி​யாகக் கட்டிக்​கொள்கிற தேங்காய் எண்ணெயைப் போன்ற​வர்கள் பெண்கள். லேசாக வெப்பம் பட்டாலே தண்ணீராக உருகி​விடு​வார்​கள்...’ என ஆடு மேய்க்கும் அல்லி​முத்து சொல்கிறார். ஆனால், அதே பெண்கள்தான் பெரும் மனவலிமை கொண்ட​வர்​களாகவும் இந்த நாவல் முழுவதும் வலம்வரு​கிறார்கள். இந்த நாவலின் பெரும் பலம் அதன் வட்டார வழக்கு. அது கதை மாந்தர்​களுடன் நம்மை மேலும் அணுக்​க​மாக்கு​கிறது. இப்படிப் பல அம்சங்​கள்வழி மூன்று தலைமுறைப் பெண்களின் வலியை நமக்குள் கடத்தும் நேர்மையான படைப்பு ஜிகிட்​டி.

ஜிகிட்டி

கவிப்பித்தன்
தடாகம் வெளியீடு
விலை: ரூ.380
தொடர்புக்கு: 98400 70870

- தொடர்புக்கு: niveditalouis@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in