Published : 16 Jun 2018 09:42 AM
Last Updated : 16 Jun 2018 09:42 AM

தொகுடுகறி: வாசிப்பில்லா எழுத்து!

ஃபே

ஸ்புக்கில் எழுத்தாளர்கள் முன்னெடுக்கும் விவாதங்கள் வாசகர்களுக்கான பெருங்கொடை. போகன் சங்கரின் சமீபத்திய பதிவு ஓர் உதாரணம்: “சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களைப் படிக்காத ஒரு தலைமுறை இப்போது எழுத வந்திருக்கிறது. எழுத்தாளர்களுக்கு இது ஒரு புதுவிதமான பிரச்சினையைக் கொண்டுவருகிறது. ஒன்று, அவர்கள் எப்போதோ எழுதியதையே திரும்பவும் எழுதி, சக்கரத்தைத் திரும்பவும் கண்டுபிடித்து ‘நான் விளிம்பு.. நீ களிம்பு’ என்றெல்லாம் இலக்கிய பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். இரண்டு, அவர்கள் அடைந்த உயரங்களைக்கூட அடைய முடியாமல் திணறுகிறார்கள். இலக்கியத்தைப் பொறுத்தவரை கள்ளன் போன வழி தெரியாவிட்டால் காப்பான் வழியும் தெரியாது”.

 தமிழன்பனின் கவிதைக் கேள்விகள்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘கனா காணும் வினாக்கள்’ எனும் கேள்விகளாலான கவிதை நூலை 2004-ல் வெளியிட்டார். பாப்லோ நெரூதாவின் நூற்றாண்டினையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், தற்போது ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரேகொரி ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அகராதித் துறையில் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் கிரேகொரி ஜேம்ஸ், ஆங்கிலத்தில் தமிழ் ஒலிக்குறிப்பையும் சேர்த்து இணைத்திருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். கவிதைகளாலான கேள்விகள் திசையெட்டும் எழட்டும்!

மெய்யப்பனின் பெயரால் விருதுகள்!

பொன்விழா கண்ட மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் ச.மெய்யப்பனின் பிறந்த நாளையொட்டி, கடந்த 11 ஆண்டுகளாக விருதுகள் வழங்கிவருகின்றனர். 2018-க்கான சிறந்த தமிழறிஞர் விருது, மொழியியல் அறிஞர் முனைவர் க.இராமசாமி, சிறந்த நூல்களுக்கான விருது முனைவர் சு.மாதவன் (‘தமிழ் அற இலக்கியங்களும் பெளத்த சமண அறங்களும்’), மு.விவேகானந்தன் (‘தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்’), சிறந்த பதிப்பகங்களுக்கான விருது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், குன்றம் பதிப்பகத்துக்கும் வழங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதகான சபாவில் வரும் வியாழன் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுகிறது.

இசைப்பாடலாகும் சங்க இலக்கியம்!

 

Ravi படம்: வடகரா மோகன் தாஸ்  

 

கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் முறைப்படி கர்னாடக இசை கற்றுக்கொண்ட பாடகரும்கூட. இதுவரை, 30-க்கும் மேற்பட்ட நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். தற்போது, குறுந்தொகையின் பிரிவுத் துயரைச் சொல்லும் ‘காதலர் உழையர்ஆகப் பெரிது’, ‘அருளும் அன்பும் நீங்கி’, ‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ ஆகிய மூன்று பாடல்களுக்கு மெட்டமைத்துப் பின்னணி இசையையும் பதிவுசெய்திருக்கிறார். திவாகர் சுப்பிரமணியம் இசையில் அனுக்கிரஹா ஸ்ரீதர் பாடியிருக்கும் இந்தப் பாடல்கள் சங்க கால இசைப்பண்களின் அடிப்படையில் அமைந்தவை. ஒலிப்பதிவுச் செலவை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஏற்றுக்கொண்டார். “இன்னும் 10 சங்கப் பாடல்களுக்கு மெட்டமைத்து வைத்திருக்கிறேன், தயாரிப்பாளர் கிடைத்தால் ஆல்பமாக வெளியிடலாம்” என்கிறார் ரவிசுப்பிரமணியன்.

 

தொகுப்பு: மு. முருகேஷ்,  த. ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x