

வாசகப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் சில எழுத்தாளர்களின் கதைகளை விருப்பத்துடன் படித்திருப்போம். அவர்களது கதைத் தொகுப்புகள் நமது புத்தக அடுக்கிலும் இருக்கும். ஆனால், காலவோட்டத்தில் அவை நம் நினைவில் பின்தங்கிவிடும். தொடர்ந்த வாசிப்பினூடே புதிய எழுத்தாளர்களை வாசித்து அறிந்த பின், நமக்குள் சேகரமாயிருக்கும் வரிசையில் சில பெயர்கள் முன்னும் பின்னுமாக மாறியும் இருக்கும்.
சில வருடங்களுக்குப் பிறகு அவர்களது பெயர்களை மீண்டும் காணும்போது அல்லது அவர்களை நேரில் சந்திக்க நேரும்போது முன்னர் எப்போதோ படித்த கதைகள் நினைவில் எழும். இத்தனை ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை, புதிய தொகுப்புகள் வந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளாதது குறித்து மெல்லிய வருத்தம் எழும்.
கடந்த சில வருடங்களில் அப்படி நான் மீண்டும் சந்தித்து நெருங்கிய எழுத்தாளர்களில் ஒருவர் உதயசங்கர். அவரது முதல் தொகுப்பான ‘நீலக்கனவு’ என் புத்தக அலமாரியில் உள்ளது. அதேபோல, ‘மறதியின் புதைசேறு’ தொகுப்பும் என்னிடம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ படித்த ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இரவு’, ‘மறதியின் புதைசேறு’ போன்ற கதைகள் என் நினைவில் உள்ளன.
அண்மையில், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்துள்ளது. 1988இல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பான ‘யாவர் வீட்டிலும்’ தொடங்கி, இதுவரை 12 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 63 வயதான அவர் 43 ஆண்டுகளில் மொத்தம் 107 கதைகளை எழுதியிருக்கிறார். எழுத்துக்காக அவர் செலவிட்டிருக்கும் காலம் என்பது அவரது வாழ்நாளின் பெரும்பகுதி. வேலைக்காகவும் குடும்பத்துக்காகவும் அவர் செலவிட்ட காலத்தையும்விட இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் செலவிட்ட காலம் கூடுதல். எனவே, இலக்கியமும் எழுத்தும் அவரது வாழ்வின் ஒரு பகுதியல்ல; பெரும்பகுதி.
இத்தனை ஆண்டுகள் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் என்பதே பெரும் சாதனைதான். உரிய அங்கீகாரம், விருதுகள், பரிசுகள் போன்றவற்றையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் இல்லாமல் இவ்வளவு காலமும் இதில் காலம் தள்ளியிருக்க முடியாது. எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். எழுதத் தொடங்கினார். எழுதிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து அவர் சிறுகதைகளையே எழுதியிருக்கிறார். பிற வடிவங்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. ‘முகங்கள்’, ‘நீலக்கனவு’ போன்று சில குறுநாவல்களை அல்லது நெடுங்கதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். நாவல் முயற்சி எதுவும் செய்யவில்லை. சிறுகதை வடிவைத் தனது புனைவுக்குரிய வடிவமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதன் பல்வேறு சாத்தியங்களையும் முயன்று பார்த்திருக்கிறார்.
நேரடியான யதார்த்த பாணியிலான கதைகளையே அதிகமும் எழுதியிருக்கிறார். ஆனால், அதே வேளையில் இந்த 40 ஆண்டுக் காலத்தில் சிறுகதைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தனது எழுத்திலும் அவற்றை முயன்று பார்த்திருக்கிறார். ‘விசித்திரத் திருடர்கள்’, ‘நொண்டி நகரம்’, ‘நீலிச்சுனை’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அவரது கதைகளின் ஒரு பகுதி பெண்களின் உலகை மையமாகக் கொண்டது. திருமணம் ஆகாத முதிர்கன்னிகள், வறுமையையும் பசியையும் சமாளிக்கும் குடும்பத் தலைவிகள், கணவனின் கொடுமைகளைச் சகித்துக் கிடக்கும் மனைவிகள், முதிய வயதில் பிள்ளைகளின் ஆதரவுக்காக ஏங்கி ஏமாறும் தாய்மார்கள் என்று பெண்களுடைய வாழ்வின் எல்லா பாடுகளும் கதையில் சொல்லப்பட்டுள்ளன.
அவரது கதைகளின் இன்னொரு பகுதி, முதியவர்களின் பாடுகளைச் சொல்பவை. கடந்த கால நினைவுகளுக்குள் நாள்களைக் கடத்தும் பெரியவர்கள், ஒருவேளைச் சோற்றுக்காக ஏங்கிக் காத்திருக்கும் பசியவர்கள், பசியாற வழியின்றி, இருக்க இடமின்றி அல்லாடும் வயசாளிகள் இவரது கதையுலகில் நிறைந்திருக்கிறார்கள். இன்று பெருநகரங்களில் ஏ.டி.எம்.-களிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இரவுக் காவல் பணியாளர்களாக இருப்பவர்கள் அதிகமும் இத்தகைய முதியவர்களே.
40 வருடங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் ஒரு வகையில் சமூக வரலாற்றின் பக்கங்கள்கூட. வெவ்வேறு காலக்கட்டங்களில் நம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இவை நமக்குக் காட்டுகின்றன. விளக்கு இல்லாத மிதிவண்டி, இரவில் அதைப் பிடிக்கும் போலீஸ் என்கிற காட்சியை இன்றைய சூழலில் வைத்து யோசித்துப் பார்க்கும்போது, நாம் எவ்வளவு தொலைவைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை உணரலாம்.
அதேபோல, வெவ்வேறு கதைகளிலும் காணக் கிடைக்கும் ரயில்நிலையக் காட்சிகள். புற வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு நிகராக மனிதரின் அகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்று யோசிக்கவைக்கின்றன இந்தக் கதைகள். மனிதர்கள் மாறவேயில்லை. நடை உடை பாவனைகள், வசதிகள் எல்லாம் மாறியுள்ளன.
அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு எல்லாம் மனிதர்களது உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ஆனால், அகம் அப்படியேதான் உறைந்திருக்கிறது. மனித சுபாவத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்றும் மனிதர்கள் சுயநலவாதியாகத்தான் இருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் ஏமாற்றுகிறார்கள், சுரண்டுகிறார்கள். ஏமாற்றும், சுரண்டும் விதங்கள்தான் முன்னேறியுள்ளன. ஏமாற்றுவதும் சுரண்டுவதும் மாறவில்லை.
உதயசங்கரின் கதைகள் 40 வருடக் காலத் தமிழக வாழ்வின் சில தடங்களை நமக்குக் காட்டுகின்றன. அந்தத் தடங்களின் வாயிலாக நாம் நகர்ந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வாய்க்கிறது. இனி இந்தப் பாதை எங்கே, எதை நோக்கிப் போகும் என்கிற அழுத்தமான கேள்வியும் எழுகிறது.
உதயசங்கர் கதைகள்
உதயசங்கர்
நூல்வனம் வெளியீடு
விலை: ரூ.1,100
தொடர்புக்கு: 91765 49991
- தொடர்புக்கு: murugesan.gopalakrishnan@gmail.com