நூல் வெளி | ரசனையில் துலங்கும்: சங்க இலக்கியம்

நூல் வெளி | ரசனையில் துலங்கும்: சங்க இலக்கியம்
Updated on
3 min read

தோற்றத் தொன்மை, தொடரும் இளமை என்ற இரண்டு பெருமிதங்​களையும் ஒருங்கே கொண்ட தமிழின் இந்தச் சிறப்​பியல்பை உணர்ந்து, உள்வாங்கி, யுகபாரதி செதுக்கி​யுள்ள சிறந்த படைப்பு ‘மேல் கணக்கு’. தமிழுக்குள் வேரும் விழுது​மாகத் தொடரும் அழகியலை, தனித்துவமான சில கருத்​தி​யல்களை, சொல்லாட்​சிகளின் பெருமிதத்தோடு மீள்வாசிக்​கிறார் யுகபாரதி. அதன் பயனாகவே இந்நூல் தமிழுக்குக் கிடைத்​துள்ளது.

தன் நெஞ்சில் உணர்ந்த பெருமிதத்​திற்குப் பின்வருமாறு சொல்வடிவம் கொடுத்​திருக்​கிறார் யுகபாரதி, ‘யாரோ எட்டி உதைத்து, இலக்கியக் கடலுக்குள் விழுந்தவன் கைநிறைய முத்துக்​களுடன் கரைசேர்ந்​ததுபோல் இருக்​கிறது. பூமிப்​பந்தின் மேலே ஓர் இறகுபோலப் பறக்கும் பாக்கி​யத்தைச் சங்கப் பாடல்கள் வழங்கு​கின்றன. ஓரிரு சொற்களின் உள்பொருளைக் கண்டதுமே அவை கண்திறந்த காகிதச் சிலைகளாக எனக்குத் தோன்றின’ என்கிறார்.

அகநானூற்றில், புறநானூற்றில், முத்தொள்​ளா​யிரத்தில் யானையின் ‘மனசும்’ உடல்மொழியில் பேசப்​படும் விதத்தை ஒப்பிடும்போதே கலித்​தொகை, திருமூலர், அழுகுணிச் சித்தர் என்று எங்கெங்கோ பயணித்து, கடைசியில் ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்ற கண்ணதாசன் திரைப்​பாடல் தரும் தத்துவத் தரிசனத்தில் கொண்டு​வந்​து​விடு​கிறார்.

சங்க இலக்கி​யத்தில் தொடங்​கினால் என்ன? ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ண​மூர்த்தியின் பெயரைக் குறிப்​பிடாமல் யானை பற்றிய உரையாடல் நிறைவு பெறுமா? வைக்கம் பஷீரின் ‘யானை முடி’ கதை எல்லாம் எனக்குப் புதிய சாளரம்.

‘சொல்வலை வேட்டுவம்’ என்ற முதல் கட்டுரையை முடிக்கும் விதத்​தில்தான் யுகபாரதி தனித்து நிற்கிறார். ‘ஆயிரம் யானைகளைக் கொன்ற​வனைப் புகழ்ந்த ஒரு புலவர், பொற்தேங்​காயைப் பெற்றுச் சுகபோக வாழ்வை வாழ்ந்​து​விட்டுப் போயிருக்​கிறார்.

ஆனால், அதே மரபில் வந்த இன்னொரு புலவன், ஆயிரம் கவிதைகளை எழுதி, ஒரே ஒரு தேங்காயை அன்பின் நிமித்தம் கொடுத்த குற்றத்​திற்​காகத் திருவல்​லிக்கேணி பார்த்​தசாரதி கோயில் யானையால் அல்லோல​கல்​லோலப் பட்டுச் செத்திருக்​கிறான். செத்தவனின் பெயர் பாரதி என்பது சின்னப் பிள்ளைக்​குக்​கூடத் தெரியும்’ என்பதை வாசித்து உறைந்​தேன்.

ஹைக்கூவின் வடிவம்தான் தமிழுக்குப் புதிதே தவிர, அது உள்ளடக்கிய தத்துவமோ சொல்முறையோ புதிதில்லை என்ற கருத்தை ‘அதிவிசேஷ வண்ணத்​துப்​பூச்சி’ என்ற தலைப்பில் முன்மொழியும் யுகபாரதி ‘உறங்​குவது போலுஞ் சாக்காடு’ என்ற வள்ளுவரின் சுண்டக் காய்ச்சிய பிரபஞ்சச் சொல்லாடலுக்கு, புரிதலுக்குச் சற்றும் குறைவில்​லாதவை ‘ஆழ்ந்து உறங்கு​கிறது / ஆலயமணியின் மேல் / வண்ணத்துப் பூச்சி’ என்ற பூஸனின் ஹைக்கூ என்று ஒப்பிட்டு அறிவிக்​கிறார்.

சங்க இலக்கியப் புலவர் குறுங்குடி மருதனாரின் ‘மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’ என்ற அகநானூற்று (4) வரியை, முத்துலிங்கம் எழுதிய திரைப் பாடலில் வரும் ‘மணிவாசல்’ என்ற சொல்லாட்​சி​யுடன் ஒப்பிட்டு அழகு பார்ப்​ப​தோடு, ‘இரண்டு படிமங்களை இணைத்து ஓர் அற்புதத்தை உணர ஜென் உதவுவதைப் போல, இரண்டு தனித்​தனிச் செயல்​பாட்டை ஒன்றாக்கிப் பார்ப்​பதில் ஒரு தவறும் இல்லை’ என்ற நிலைப்​பாட்​டையும் தெளிவுபடுத்து​கிறார் யுகபாரதி.

மூன்று வரியோ முப்பது வரியோ ஒரு நல்ல கவிதை எனில், அது வார்த்​தைகளின் கணக்கை வைத்து வரையறுக்​கப்​படு​வ​தில்லை என்று சொல்லும் யுகபாரதி, வள்ளலாரின் அருட்​பெருஞ்சோதி அகவலை​யும், கண்ணதாசனின் ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் / அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன்’ என்ற திரைப்​பாடல் வரியையும் ஒரே மூச்சில் நினைவு​கூர்ந்து திறனாய்வு செய்கிறார்.

ஆழமான, பரந்து​விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில், நுட்பமான, அதேநேரத்தில் விரிவான வாசிப்பு அனுபவ​மும், எழுத்​தாற்​றலும் ஒருங்கே கொண்ட சிலர்தான் இப்படி எல்லாம் எழுதுவது சாத்தியம். ‘மேல் கணக்கு’ என்கிற இந்த நூலை வாசிக்​கும்போது என்னை மீண்டும் மீண்டும் கவர்ந்​திழுத்தது யுகபார​தியின் மொழிநடை​தான். ‘இயற்​கையையே அறிவாகக் கொண்ட பறவைகள், யுகயுகங்​களாகத் தம்முடைய சிறகு​களால், வானையும் மண்ணையும் அளந்து அழகாக்கி வருகின்றன.

ஒரு வான்குருவி கட்டுகிற கூட்டிற்கு இணை ஒன்றுமில்லை. மரத்தில் தொங்கியவாறு கூடமைக்கும் குருவி, இயற்கையி​லிருந்தே தன்னை வடிவமைத்​துக்​கொள்​கிறது. கீழே வாசல் வைத்து அது அமைக்கும் கூட்டில் வாழ்விற்கான புத்திசாலித்​தன​மும், பொறுப்பு​ணர்வும் சேர்ந்​துள்ளன. பறவையாக முடியாத மனிதர்களோ தமக்கேற்ப ஒரு பறவையைக் கற்பனையில் உருவாக்கி, கண், காது, மூக்கினை வைக்கிறார்கள்’ என்றதுடன், பல்வேறு படைப்​பாளிகளை ஆங்காங்கே நினைவு​கூர்ந்து எழுதி​யிருக்​கிறார்.

என்னைப் போன்ற​வர்​களுக்கு இது ஒரு புதிய வகையான ஆற்றுப்​படுத்​துதல்​தான். ‘உனது அழுகை உனக்கே அந்நிய​மாகும்போது / கண்ணீரில் ஈரமிருக்காது / உலர்ந்த உப்பு கிளர்ந்து உதடுகளில் படியும் / அமைதியாக அழு / கடலைப் பார்த்து / மலையைப் பார்த்து / ஒற்றைக் கூழாங்​கல்லைப் பார்த்து / கிணற்றுக்குள் அடைபட்ட நீரில் மிதக்கும் நிலாவைப் பார்த்து அழு / அழுகை உனது அழுக்கைக் கழுவும்’ என்ற ரமேஷ்பிரேதனின் வரிகளை யுகபாரதி கோடிட்டுக் காட்டு​கிறார். எனக்கு ரமேஷ்பிரேதனை உடனே, இப்போதே வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இதுவரையில் பல்வேறு ஆய்வாளர்கள் சங்க இலக்கி​யத்தைப் பெரும் உருவமாக நம்முன் கொடுத்​துள்ளனர். அதனை ஓரம்கட்​டி​விட்டு, ரசனையின் வழியே சங்க இலக்கி​யத்தை அணுகி, அதைத் தம் வாசகர்​களுக்கு ‘மேல் கணக்கு’ என்கிற நூல் மூலம் கொடுத்​துள்ளார்.

பண்டைய இலக்கி​யத்தைப் புரிந்​து​கொள்​வதற்​குக் ​காணப்​படும் எட்டு வகையான பொருள்​கோள் ​முறை​களில் ‘​கொண்​டு​கூட்டுப் பொருள்​கோள்’ ​முறையை இந்​நூலில் கை​யாண்​டுள்ள​தாகத் தெரிவிக்​கிறார் ​யுகபாரதி. ப​திவுகளாக அமைந்​துள்ள பதினொரு கட்டுரைகள் ஒவ்​வொன்​றும் ஒரு குறிப்​பிட்ட பொருளின் ஆழ அகலங்​களைப் புலன் ​விசாரிக்​கின்றன.

மேல் கணக்கு
யுகபாரதி
நேர்நிறை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 98411 57958

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in