

நமது அனுபவ எல்லைகளைக் கடந்த, தற்காலத்தின் நம்ப முடியாத அனுபவங்களின் திரட்சி, கனவும் நினைவுமாக ‘போதமும் காணாத போதம்’ நூலில் படைக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பைத் தமிழின் முதல் ‘துங்கதை’ என்கிறார் எழுத்தாளர் அகரமுதல்வன். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி. இத்தொகுப்பில் ஈழ யுத்தப் படலம், கதைக் களமாகியிருக்கிறது.
‘குந்த ஒரு பிடி நிலமும், எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடியவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்காகப் போரிட்டு மாண்டவர்களின் வீரத்தை ஈழத்தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.
‘சொந்த வீட்டிற்குச் செல்வதற்கும் வழியற்றிருக்கும் அவர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்; அது புதைகுழி அல்ல விதைகுழி; உயிர் பிரிந்த பிறகு அவர்களின் உடல் வெற்றுடல் இல்லை, வித்துடல்’ என்றெல்லாம் இந்நூல் வெம்மை கலந்து வெளிப்படும் மூச்சாய் வெளிப்படுகிறது.
ஈழப்போரில் தானாக முன்வந்து தெய்வங்கள் உதவியதாகத் தெரியவில்லை. மக்கள் உருகி உருகி வேண்டியும் தெய்வங்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மக்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள்கள் இருந்திருக்கின்றனர் எனும் குமுறல்களை இந்நூலில் காண முடிகிறது.
இந்த நூல் ஈழக் கனவுக்குச் சொற்களால் எழுப்பப்பட்டிருக்கும் நடுகல். இதில் வழிபாடும் உண்டு; விசாரணையும் உண்டு. நடுகல் களத்தில் வீரச்சாவு அடைந்தவர்களுக்காக எடுக்கப்படுவது. மக்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தந்தவர்களை வழிபடுவது, ஒருவகையில் நன்றிக்கடன்கூட. ஆனால், அகரமுதல்வன் நடுகல் வழிபாட்டிலும் நடந்தவற்றிற்கு நியாயம் கேட்கிறார். தெய்வங்களையும் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்.
கனவில் வரும் காளியின் தலையில்கூட ஷெல் காயம் இருக்கிறது. “ஒரு பீஸ் துண்டு காளியின் தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில் அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்று காளியைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.
“கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியும் என்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவுகூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து மடியும்படியா நீர் எங்களைப் படைத்தீர்?” என்று கேட்டிருக்கிறார்கள்.
“வீரபத்திரர் மட்டுமா தெய்வம். இஞ்ச எங்களைக் காப்பாத்துற எல்லாரும் தெய்வம்தான்” என்று அவர்களைக் கொண்டாடும்போதே இயக்கத்தின் மீதும் விசாரணையும் படருகிறது.
சனங்களின் ஆற்றாமையையும் கேள்விகளையும் பொருட்படுத்தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகள் உடையவை அல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்தில் உள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன், எதன் நிமித்தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. “இயக்கம் அழிந்து போகப் போகிறது என அம்மாவும் சொல்லிய ஒரு பகல் பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரிய ஒளி மங்கிச் சரிந்தது” என்ற அகரமுதல்வனின் கோபத்தில் நியாயம் தெரிகிறது.
இவ்வளவு நடந்த பிறகும் - “எல்லாரும் எல்லாமும் சாம்பலா போச்சு.. எண்ணுக் கணக்கு இல்லாமல் பூமிக்குத் தின்னக் கொடுத்தாச்சு” என்று கையறு நிலைக்கு ஆளாக்கும் குரல் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் கடந்து ‘ரத்தம் கொடுத்தது நான் இல்லை.. நிலம்’ என்று நினைத்திருக்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தில் இருந்த ஆதாவும் இலங்கைப் படையினனான சமிந்தாவும் போர் முடிந்த காலத்தில் காதலிப்பது, அவர்கள் யுத்தக் காலத்தை மறக்க நினைக்கிற தருணங்களாக இருக்கின்றன. யுத்தக் காலத்திலும் யுத்தக் கொடூரங்களிலிருந்து மக்கள் தப்பிக்கும் தருணங்கள், அவர்கள் காதலிக்கிற காலங்களாகவே இருந்திருக்கின்றன என்பதும் ‘யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடம் இதுதான்’ என்பதையும் உளவியலோடு அகரமுதல்வன் உறுதிப்படுத்துகிறார்.
கொந்தளிப்பான வாழ்வின் சித்திரங்களையும் ஈழத் தாழியிலிருந்து அகழ்ந்தெடுத்திருக்கிறார் அகரமுதல்வன். சிறுவயதிலிருந்தே எழுத்தையும் இலக்கியத்தையும் உறவாக்கிக் கொண்டவர்.
சைவப் பதிகங்கள், சைவ சமயச் சொற்பொழிவுகள், நிகழ்த்துக் கலைகள் எனும் பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய போர் அவல அனுபவங்களின் எடுத்துரைப்பில் செழுமை சேர்த்திருக்கின்றது. பைபிள் தமிழும் சைவத் தமிழும் சங்கத்தமிழும் கலந்த மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவநம்பிக்கையின் ஆதிக்க வெளியில் வாழ்க்கை நடந்தபோதும், சொற்களால் புதிய நம்பிக்கையை விதைக்கிறார் அம்மா கதாபாத்திரம்: “எங்கட முதுசமாய் இருக்கிற வித்துடல்.
அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்தெழுமடா தம்பியா” - ஆரின்ர வித்துடல் என்று அறம்பாவை அத்தையிடம் கேட்டதும், என் பின்னே வந்து நின்ற அம்மா “எங்கட மண்ணோட வித்துடல் என்றாள்”. முதுசொம் - முந்தைய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்து. அகரமுதல்வன், ஈழப் போராட்டத்தைத் தமிழுக்கு முதுசொம் ஆக்கியிருக்கிறார்.
போதமும் காணாத போதம்
அகரமுதல்வன்
நூல் வனம் வெளியீடு
விலை: ரூ.320
தொடர்புக்கு: 91765 49991
- தொடர்புக்கு: maran.tamil@gmail.com