நூல் வெளி: வரலாற்றில் ஒரு வாசல்

நூல் வெளி: வரலாற்றில் ஒரு வாசல்
Updated on
2 min read

எண்​ப​துகளில் கணிசமான ஈழத் தமிழர்​களின் புலம்​பெயர்​வுக்கான வாயிலாக இருந்தது பெர்லின் நகரம். எப்படி? காரணம் வரலாற்றில் இருக்​கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நேச நாடுகள் தோல்வியடைந்த நாடுகளைத் தங்கள் செல்வாக்குப் பகுதி​களாகப் பிரித்துக்​கொண்டன.

ஜெர்மனி நான்கு துண்டுகளானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகிய நான்கு வெற்றி​யாளர்​களுக்குத் தலா ஒரு கோப்பை கிடைத்தது. இதுதான் போஸ்ட்டாம் உடன்படிக்கை (1945).

இதில் முதல் மூன்று நாடுகளின் பகுதிகள் இணைந்து மேற்கு ஜெர்மனியாகவும், சோவியத் ஒன்றியத்தின் பகுதி கிழக்கு ஜெர்மனியாகவும் மாறின. முன்னதில் முதலா​ளித்​து​வமும் பின்னதில் சோஷலிசமும் அரசுக் கொள்கைகளாகின. எனில், இரண்டு பகுதி​களுக்கும் தலைநகர் ஒன்றுதான் - பெர்லின்.

அது கிழக்கு ஜெர்மனியில் இருந்தது. தலைநகருக்குள் இரண்டு ஜெர்மனிகளின் ஆளுகைப் பிரதேசங்​களும் இருந்தன. இதுதான் இலங்கை​யிலிருந்தும் அடக்குமுறைக்கு உள்ளான இன்ன பிற நாடுகளிலிருந்தும் தஞ்சம் நாடி வந்த அகதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. இந்த வரலாற்​றைத்தான் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ விரித்​துரைக்​கிறது.

ஈழத் தமிழர்​களின் துயரமும் அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரும் நவீன இலக்கியத்தில் பதிவாகிவரு​கின்றன. அந்த அளவிற்குப் புலம்​பெயர்வின் அலைந்துழல்வு பதிவாக​வில்லை. தமிழர்​களின் வலி மிகுந்த பயணம் இலக்கிய வெளிச்சம் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்​கக்​கூடும்.

இந்தக் கதையை எழுது​வதற்கு ஆசி.கந்​தராஜா பலவிதத்​திலும் தகுதி​யானவர். எழுபதுகளின் பிற்பகுதி​யில், கிழக்கு ஜெர்மனி வழங்கிய புலமைப் பரிசிலைப் பெற்று, அங்கு பட்டப்படிப்பை முடித்​தவர். எண்பதுகளின் முற்பகுதியில் மேற்கு ஜெர்மனியின் நல்கையைப் பெற்று அங்கு முனைவ​ரானவர்.

வேளாண் பேராசிரியர். இவரது இன்னொரு முக்கியமான நூல் ‘மண் அளக்கும் சொல்’ (காலச்​சுவடு, 2022). அந்த நூலில் இடம்பெறுபவை வேளாண் கட்டுரைகள். ‘அகதியின் பேர்ளின் வாசல்’ பல வரலாற்றுச் சிடுக்​குகள் கட்டவிழும் புனைவு நூல். அபுனைவுச் செய்தி​களும் கலந்திருக்​கின்றன.

இந்த நாவல் இரண்டு இளைஞர்​களின் கதையாக விரிகிறது. முகவர்​களிடம் பணம் கட்டி, தவராசாவை அவனது அப்பா ஜெர்மனிக்கு அனுப்பு​கிறார். அந்நாளில் தமிழர்​களுக்குக் கிடைத்​தற்கரிய புலமைப் பரிசில் பெற்று, ஜெர்மனிக்குப் படிக்க வருகிறான் பாலமுருகன். இருவரின் அனுபவமும் வேறு வேறானவை. தவராசாவிற்கு எளிதில் விசா கிடைக்க​வில்லை. காத்திருப்பு நீள்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளுக்குத் தொழிலா​ளர்களை அனுப்பும் முகவர்கள் மும்பையிலிருந்துதான் இயங்கினார்கள். மும்பையிலிருந்து விமானக் கட்டணங்​களும் குறைவாக இருந்தன. ஆகவே, ஈழ அகதிகள் இடைத்​தங்கும் இடமாக மும்பை பயன்படுத்​தப்​பட்டது. இவர்களில் சிலர் போதைப் பொருள் கடத்தலுக்கும் பாலியல் அத்து​மீறலுக்கும் இரையானார்கள். இவ்விரு குற்றச்​செயல்​களுக்கும் தவராசவே ஒரு சாட்சி​ய​மாகிறான்.

பாலமுருகன் கிழக்கு ஜெர்மனியில் துறை சார்ந்த கல்வியோடு கம்யூனிசத்தையும் பாடமாகப் படிக்​கிறான். கிழக்கில் எல்லோருக்கும் அவரவர் ஆற்றலுக்​கேற்ற வேலை கிடைக்​கிறது. ஆனால், அத்தி​யாவ​சியத் தேவைகளுக்கான ஊதியமே வழங்கப்​படு​கிறது. மேற்கில் ஆடம்பரமும் உல்லாசமும் தளும்​பு​கிறது. கிழக்கின் பணத்தை நாட்டின் எல்லையைக் கடந்தால் மாற்ற முடியாது. மேற்கின் பணத்திற்கு உலகெங்கும் மதிப்பு இருந்தது. இரண்டு ஆட்சி முறைகளுக்கும் பாலமுருகனே சாட்சி​யாகிறான்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்​சியைத் தொடர்ந்து 1989இல் கிழக்​கிற்கும் மேற்கிற்கும் இடையிலான பெருஞ்​சுவர் தகர்க்​கப்​படு​கிறது. கிழக்​கிலிருந்து சாரை சாரையாக மக்கள் மேற்கு நோக்கிப் போகிறார்கள். இது பின்கதையில் வருகிறது. அதன் பிறகு அகதிகளின் பெர்லின் வாசலும் அடைபட்டுப் போகிறது. அது என்ன பெர்லின் வாசல்?

மேற்கு ஜெர்மனியின் ஆறாம் இலக்க மெட்ரோ ரயில் பெர்லின் நகரின் ஊடாக ஓடியது. அது கிழக்கு ஜெர்மனியில் ஒரேயொரு நிலையத்தில் நிற்கும். அந்த ரயிலில் ஏறுவதற்கு கிழக்கு ஜெர்மானியர்​களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்ட​வருக்குத் தடையில்லை. கிழக்கு ஜெர்மனியில் வந்திறங்கும் அகதிகள் இந்த நிலையத்தில் ஏறினார்கள். இது கிழக்கின் ஆசிர்​வாதத்​துடன் நடந்தது.

அவர்கள் மேற்கு பெர்லின் வந்ததும் மேற்கு ஜெர்மனியில் வசிப்​ப​தற்கான அகதி அந்தஸ்து கோருவார்கள். விசாரணை பல மாதங்கள் நீளும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பலரால் பிரான்ஸ், நார்வே, டென்மார்க் முதலான ஐரோப்பிய நாடுகளுக்​கும், பிரிட்டன், கனடா முதலான ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கும் போக முடிந்தது. அந்நாளில் விசா கெடுபிடி குறைவாக இருந்​தா​லும், இந்தப் பயணங்களோ துயராலும் குளிராலும் நிச்​சயமின்​மையாலும் நிரம்​பி​யிருந்தன. அகதிகள்​ ஆக முடி​யாமல் போனவர்​களின் கதை தனி.

மேற்​குலகை அடைய ஈழத் தமிழர் பலருக்கு எண்​ப​துகளில் பயன்பட்ட இந்த வாசலைச் சுவாரசி​யமான நாவலாக்கி​யிருக்​கிறார் கந்​த​ராஜா. அதன் வழியாக ஒரு காலக்​கட்டத்தை ஆவணப்​படுத்​தி​யிருக்​கிறார்​.

அகதியின் பேர்ளின் வாசல்
ஆசி.கந்தராஜா
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.200
தொலைபேசி: 04652 278525

- mu.ramanathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in