நூல் வெளி | ஊரார் வனைந்த நூலகம்

நூல் வெளி | ஊரார் வனைந்த நூலகம்
Updated on
2 min read

காவிரி ஆற்றங்​கரையில் அமைந்​திருக்​கும் அழகிய ஊர் முசிறி. எழுத்​தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக்​ கட்டிடம் காலத்​தால் சிதிலமடைந்​த​போது, அதே இடத்தில் அதைப் புதுப்​பிக்​கும் முயற்​சிகளை நூலகரும் நூலகத்​ துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்த உள்ளூர் மக்கள், முசிறி​யில் இயங்கும் ‘களம்’ இலக்கிய அமைப்​பின் மூலம் ஒரு குறுக்கீடு செய்தார்​கள்.

ஊரின் வளர்ச்​சி​யைக் கணக்கில் கொண்டு, நூலகம்​ விரிவாக்​கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. மக்களின் விருப்​பத்​துக்கு உயிரூட்டிச் செயல் வடிவம் கொடுக்க எப்போதும் ஓர் அமைப்பு அல்லது இயக்கம்​ தேவைப்​படும். அந்த இடத்தில் தன்னார்​வமாக வந்து​நின்றது முசிறி​யின் ‘களம்’ இலக்கிய அமைப்பு. ஊராட்​சியாக இருந்த முசிறி, இன்று நகராட்சி ஆகிவிட்டது. நகராக விரிவு கொண்டுவிட்டதைக் கவனத்​தில் கொண்ட ஒரு புதிய நூலகம்​ தேவை.

முசிறியின் சார் ஆட்சியராக 20 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய விஜயகுமார், இப்போது கூடுதல் தலைமைச்​செய​லா​ளராகப் பணியாற்றி வருகிறார். அவரைச் சந்தித்துக் களம் அமைப்​பினர் வழிகாட்ட வேண்டினர். பழைய ஊரின் மீது கொண்ட அன்பால் அவர் வழிகாட்ட, திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு உதவியுடன் களம் அமைப்​பினர் நூலகத் துறை அலுவலர்​களுடன் இணைந்து பணியாற்றி, ஊரின் மையத்தில் ஓர் இடத்தை அடையாளம் காட்டினர்.

மாவட்ட ஆட்சியர் அந்த 10 சென்ட் இடத்தை நூலகத் துறைக்குக் கைமாற்றித் தந்தார். இனி கட்டிடம் கட்ட வேண்டும். களம் அமைப்​பினரின் கனவு நூலகமாக அது மலர வேண்டு​மானால், மக்கள் பங்கேற்​புடன்தான் அது சாத்தியம். களத்தில் இறங்கினர் களம் அமைப்​பினர்.

ரூ.30 லட்சத்தை நண்பர்கள், ஊர் மக்களிடம் இருந்தும் திரட்டி, அரசிடம் அளித்​தனர். அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அரசு இரண்டு மடங்குப் பணமாக ரூ.60 லட்சமாக மாற்றியது. திட்டம் இன்னும் விரிவடைந்து, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயில் நூலகக் கட்டிடத்​துக்கான வரைவு உருவானது.

இதற்கிடை​யில், தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்​பேற்​கிறது. களம் அமைப்​பினர் நிதித் துறைச் செயலாளர் த.உதயச்​சந்​திரனைச் சந்தித்துப் பேசினர். அவர் அரசு அதிகாரி​களிடம் நூலகத்தின் அமைப்பு, நூலகம் இயங்க வேண்டிய முறை குறித்து உரையாடல் நிகழ்த்தி, நூலக உருவாக்​கத்தின் உந்துசக்​தியாக இருந்​தார்.

ஒரு புதிய அலுவலர்கள் குழுவுடன் இணைந்து மீண்டும் பணி தொடங்​கினர். பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரையும் களம் அமைப்​பினர் சந்தித்​தனர். திருச்சி மாவட்ட நூலகர் சிவக்​குமாரும் மக்களோடு இணைந்து கூடவே நின்றார்.

பொதுமக்கள் வாசிப்​ப​தற்கான பகுதி, மகளிருக்கான தனிப்​பகுதி, குழந்​தைகளுக்கான நூலகப் பகுதி, போட்டித் தேர்வுக்குப் படிப்​போருக்கான தனிப்​பகுதி, கூடவே ஒரு கூட்ட அரங்கு என ஒரு முழுமையான நூலகமாக அது மலர்ந்தது. அங்கே இருந்த அரசு அலுவலகம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்​குமார் வேறிடத்​துக்கு மாற்றி இடத்தை வழங்க, குழந்​தைகளுக்கான விளையாட்டுத்​திடலும் உருவானது.

தமிழக நூலக ஆணைக் குழுவின் இயக்குநர் இளம்பகவத் இப்படியான ஒரு மக்கள் நூலகத்​துக்குப் புதிய நூல்கள் வாங்கு​வதற்காக 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். களம் அமைப்​பினர் நன்கொடை​யாகப் பல நூறு புத்தகங்​களைப் பெற்று நூலகத்​துக்கு வழங்கினர்.

தமிழக முதல்வர் காணொளி வாயிலாக இந்நூல​கத்தைத் திறந்து​வைத்து, இப்போது நூலகம் செயல்படத் தொடங்கி​விட்டது. மக்களை வாசிப்பை நோக்கிக் கவர்ந்​திழுக்கும் முசிறி மக்களின் இந்த முயற்சி பின்பற்​றத்​தக்கது. இதுபோன்ற அதிசயங்கள் இன்​றைக்கும் சாத்​தியம் என முசிறி முரசறைந்து சொல்​வ​தாகவே உணர்​கிறேன்​.

- தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in