Last Updated : 05 Apr, 2018 09:59 AM

 

Published : 05 Apr 2018 09:59 AM
Last Updated : 05 Apr 2018 09:59 AM

மரணம் ஒரு கலை 6: சிறு புல்லென காலனை மிதித்த மகாகவி!

‘‘அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டுப் போக வேண்டும்!’’ - இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால் பாரதி பேசிய கடைசி வார்த்தைகள். (அமானுல்லா கான் - அன்றைய ஆப்கானிஸ்தான் மன்னர்)

பத்திரிகையும் கவிதையுமே பாரதியின் இரு கண்கள். எழுத்தை உயிர் மூச்சாகக் கொண்ட பாரதியின் இறுதி வார்த்தையும் எழுதுவதைப் பற்றியதே.

விடிந்தவுடன் பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று விட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்த பாரதியை, மரணம் நள்ளிரவிலேயே கொண்டுச் சென்றது. 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் நள்ளிரவு 1 மணி.

பாரதி எப்படி இறந்தார்?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை அடித்து இறந்தார்; யானை அடித்து படுத்தப் படுக்கையாக இருந்து மூன்று மாதங்கள் கழித்து வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு இறந்தார்; யானை அடித்தப் பிறகும் நன்றாக அலுவலகம் சென்று கொண்டிருந்தவர் ஆறு மாதங்கள் கழித்து, உடல் நலமின்றி இறந்தார் என்று பாரதியின் இறப்பைப் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.

பே

ராசிரியர் ய.மணிகண்டன் பாரதியின் ‘கோவில் யானை’ என்றொரு நாடகத்தைக் கண்டெடுத்து, சிறு நூலாக வெளியிட்டிருக்கிறார். கோயில் யானையால் தாக்கப்பட்ட நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பாரதியார் எழுதிய நாடகம் அது. 8.1.1921-ம் ஆண்டு தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளியாகி இருக்கிறது. 1921-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடகம் வெளியாகி இருப்பதால், அதற்கு முன்பாகவே யானையால் தாக்கப்பட்டு பாரதி உடல் நலன் தேறியிருக்கிறார். பாரதி யானையிடம் அடிபட்ட காலம், இந்நாடகப் பிரதியின் மூலம் ஏறக்குறைய ஓராண்டு பின்னுக்குச் செல்கிறது.

பாரதி, மற்ற உயிரினங்களிடம் எப்போதுமே அன்பு பாராட்டியவர். காக்கை, குருவியிடம் காட்டிய அதே நட்புறவுதான் சிங்கத்திடமும், யானையிடமும் காட்டினார். ஒருமுறை திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலைக்குச் சென்றபோது, சிறிதும் அச்சமின்றி சிங்கத்தின் அருகில் சென்று, ‘‘மிருகராஜாவே... நான் கவிராஜன் பாரதி வந்திருக்கிறேன்’’ என்று நட்புப் பாராட்டி சிங்கத்தை பாரதி தடவிக் கொடுத்ததாகவும் ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையிடமும் பாரதிக்கு மிகுந்த அன்பு. காலையில் தேங்காய், பழம் வாங்கிக் கொண்டு யானையுடன் வார்த்தையாடிவிட்டு வரவே கோயிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்.

வழக்கம்போல் அன்றும் கையில் தேங்காய், பழத்துடன் பாரதி கோயிலுக்குச் சென்றிருக்கிறார். ‘‘யானைக்கு மதம் பிடித்திருக்கிறது...’’ என்று மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி கிராதி. பாரதி கொஞ்சமும் யோசிக்காமல், கிராதிக்குள் நுழைந்து கையில் கொண்டு வந்திருந்த தேங்காய், பழத்தைக் கொடுத்திருக்கிறார். யானை விநாடியில் பாரதியை ஒரு சுருட்டு சுருட்டி காலுக்கடியில் போட்டுக்கொண்டது. கருங்கல் தரை. உதட்டிலும் தலையிலும் அடிபட்டு ரத்தம் ஒழுகத் தொடங்கியது. தலைப்பாகை கட்டியிருந்ததால், பாரதியின் தலை தப்பியது. சுற்றி நின்றவர்கள் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாரதியின் மேல் பேரன்பு கொண்ட, குவளைக்கண்ணன் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, உள்ளே ஓடினார். சிறு குழந்தையைப் போல் பாரதியைத் தூக்கி, தன் தோளில் கிடத்திக்கொண்டு வெளியில் ஓடி வந்தார். உடனடியாக அருகில் இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட பாரதி உடல்நலம் தேறி வீடு திரும்பியிருக் கிறார்.

வீடு திரும்பிய பிறகு, தான் யானையின் காலடியில் மிதிபட நேர்ந்தது பற்றி பாரதி, ‘‘நான் யானையின் அருகில் செல்லும்போது யானை தலையைக் குனிந்து கொண்டிருந்தது. வந்தது நானென்று யானை அறியவில்லை. அதனால்தான் தாக்கத் துணிந்தது’’ என்று சொல்லியிருக்கிறார்.

யானைத் தாக்கி பாரதி இறக்கவில்லை. யானை தாக்கியதால் ஏற்கெனவே பலவீனமான அவரின் உடல் மேலும் பலவீனமானது. ஓரளவுக்கு உடல்நலம் தேறிய பாரதி, ‘சுதேசமித்திரன்’ அலுவலகம் செல்வதும், எழுதுவதுமாகத்தான் இருந்திருக்கிறார். 1921-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறினால்தான், பாரதியின் மரணம் நிகழ்ந்தது.

பாரதி தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் நிகழ்வு. இன்றுவரை மகாகவி என்ற மகுடம் பாரதியின் தலையில் மட்டுமே பொருத்தமாக உட்காருகிறது.

பாரதியின் மிடுக்கு எல்லோரும் அறிந்தது. பாரதியின் தனிப்பட்ட பழக்கவழக்கங்களோ குழந்தை மனம் கொண்ட, ரசனையான, நேர்த்தியான மனிதரை அடையாளம் காட்டுகின்றன. முடியில்லாத நடுமண்டையை இரு பக்கமும் இருந்த அடர்த்தியான முடியால் பாரதி சரிசெய்து கொள்வாராம். சிகை அலங்காரத்தை முடித்துக்கொள்ள அரைமணி நேரம் பிடிக்குமாம் பாரதிக்கு. பெரிய தீட்சண்யம் நிரம்பிய விழிகள். தட்டுச் சுற்று வேட்டி. பனியனுக்குமேல் ஒரு சட்டை. சட்டைக்குமேல் ஒரு கோட்டு. கிழிந்த சட்டையை கோட்டுதான் பல நேரங்களில் மறைத்திருக்கிறது.

இயற்கையின் அழகில் லயித்து, தினம் பாட்டுப் பாடுவதற்காகவே புதுவையில் ‘வெல்லச்சு’ கிருஷ்ணசாமி செட்டியாரின் தோப்புக்குச் சென்றுவிடுவார் பாரதி. நண்பர்களோடு ஒரு நடையும், நடையோடு பாட்டும் கவிதையுமாக அவரின் பொழுதுகள் கழிந்த இடமே பாரதியின் ‘குயில் தோப்பு’. புதுவையின் பெரும்பான்மைப் பகுதியை அடித்து துவைத்த ஒரு புயலில், புதுவையில் இருந்த மரங்கள் எல்லாம் வீழ்ந்துவிட்டன. பாரதியின் குயில் தோப்பில் ஒரு மரமும் விழவில்லையாம். பாரதியின் கவிதைகளால் வேர் பிடித்து நின்ற மரங்கள் அல்லவா?

7 வயதில் இருந்து கவிதை புனைந்தவர் பாரதி. ஆனால் 22 வயதில்தான் அவரின் படைப்பு முதன்முதலில் அச்சேறியது. 25 வயதில்தான் 14 பாடல்களைக் கொண்ட முதல் நூல் வெளியானது. பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதிக்கு விதித்திருந்த தடை உத்தரவால், 10 ஆண்டுகளைப் புதுவையில் கழித்தார் பாரதி. இந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம்.

தீக்குச்சியைப் போல்...

தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன் புத்தகங்கள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற கனவு பாரதிக்கு இருந்தது.

தமிழர்கள் பேராதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பாரதி மணியார்டர்களுக்காக தினம் காத்திருந்தார். மணியார்டருக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு துயரக் கண்ணி, நூற்றாண்டாகத் தொடர்ந்து வருகிறது. நம்பிக்கையைத் தரும் மணியார்டர்கள் ஒருநாளும் அவர்களுக்கு வந்ததில்லை. வாழ்நாளில் அழகும் நேர்த்தியும் நிரம்பிய புத்தகங்களை அச்சடிக்க விரும்பிய பாரதிக்கு, அவரின் வாழ்நாளில் அவர் விரும்பிய வண்ணம் ஒரு புத்தகம்கூட வெளியிட வாய்க்கவில்லை.

பாரதி தன்னுடைய சுய வரலாற்றை ‘சின்ன சங்கரன் கதை’ என்ற பெயரில் முக்கால் பகுதி எழுதி வைத்திருந்தார். புதுவையில் அவர் வீட்டில் இருந்த கையெழுத்துப் பிரதி காணாமல் போனது பேரிழப்பே. ஆழ்வார்களின் நாலாயிரம் திவ்விய பிரபந்தத்தைப் போல் ‘பாரதி ஆறாயிரம்’ எழுத எண்ணியிருந்தார். பாரதி அறுபத்தாறுடன் நின்று போனது.

ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வரவேண்டும் என்பது பாரதியின் பெரு விருப்பம். புதுவையின் கடற்கரையில் வந்து நிற்கும் கப்பல்களை ஆர்வமுடன் பார்க்கும் பாரதி, அருகில் இருக்கும் நண்பர்களிடம் ஐரோப்பிய பயண விருப்பத்தைச் சொல்லி ஆதங்கப்படுவாராம்.

பேரன்பின் அற்புதம்

தாகூர் நோபல் பரிசு வாங்கியதும், மேனாட்டில் அவருக்குப் பேரும் புகழும் உண்டாவதை நினைத்து, பாரதிக்கு மனவருத்தம். தாகூருக்குக் கிடைக்கிறதே என்பதல்ல. தன் கவிதைகள் தாகூரின் கவிதைகளைவிட மேம்பட்டவை, ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பாராமுகமாக இருக்கிறார்களே என்ற வேதனை.

சிறுவயதில் தாயைப் பறிகொடுத்து வளர்ந்த பாரதிக்கு வாழ்நாள் முழுக்கவே ஏமாற்றங்களும், தோல்விகளும்தான். தனிப்பட்ட வாழ்வின் துயரங்களை மீறி, பாரதியின் கவிதைகள் பேரொளியின் அழகும், பேரன்பின் அற்புதமும் நிரம்பியவை. தான் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், பிரபஞ்சம் தன் காலடியில் இருக்கிறது என்ற நம்பிக்கையே பாரதி. பாரதியின் கவிதைகள் தொடாத பாடுபொருள் இல்லை. முயற்சிக்காத புதிய சொல்முறை இல்லை. முக்காலத்தையும் தன் கவிதைகளில் பிரதிபலித்த பாரதி ‘தமிழின் அடையாளம்’.

யானை அடித்து, உடல்நலன் சரியான பிறகு, பாரதியார் ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் செல்கிறார். பாரதி கடைசியாக கலந்துகொண்ட கூட்டம் அதுதான். அக்கூட்டத்தில் பாரதியார் பேசிய தலைப்பு, ‘மனிதர்களுக்கு மரணமில்லை!’

பாரதி தீர்க்கதரிசி.

- வருவார்கள்...

எண்ணங்களைப்பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x