Published : 22 Jan 2018 11:42 AM
Last Updated : 22 Jan 2018 11:42 AM

வடிவமைப்புப் புதுமை

 

குழந்தைகளுக்கான புத்தகங்களில் புதுமைகள், பரிசோதனைகள் அடிக்கடி நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதுவே குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தக்கவைத்து, தொடர்ந்து வாசிக்க வைக்கும். தமிழில் அப்படியான முயற்சிகள் அபூர்வமாகவே நிகழ்கின்றன. சென்ற ஆண்டில் பெரிய அளவில் சிறார் புத்தகங்களை வெளியிட்ட வானம் பதிப்பகம், இந்த முறை மற்றுமொரு வடிவமைப்புப் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்லா குழந்தைகளும் பெரியவர்களைப் போல் உட்கார்ந்துகொண்டு படிப்பதில்லை, சில குழந்தைகளுக்குத் தரையில் புத்தகத்தை விரித்துவைத்து, படுத்துக்கொண்டு படிப்பது பிடிக்கும். உட்கார்ந்து படிக்கும்போது புத்தகத்தை விரித்து வைத்துக் கையில் பிடித்துக்கொண்டேதான் படிக்க முடியும். கீழே வைத்தால் புத்தகத்தின் பைண்டிங் காரணமாக மடங்கி மூடிக்கொள்ளும். இதை மாற்றும் வகையிலும், குழந்தைகள் படுத்துக்கொண்டே படிக்கும் வகையிலும் ஸ்பைரல் பைண்டிங் பாணியில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது வானம் பதிப்பகம். யெஸ்.பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் ‘ஜெமீமா வாத்து’ (தமிழில்: சரவணன் பார்த்தசாரதி) ஆகிய புத்தகங்கள் இந்த முறையில் வெளியிடப்பட்டுள்ளன. சிறார் புத்தக வடிவமைப்பு சார்ந்த இதுபோன்ற புதுமைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

- ஆதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x