Published : 16 Dec 2017 10:43 AM
Last Updated : 16 Dec 2017 10:43 AM
யுகத்தின் முடிவில்…
இ
ந்திய இதிகாசங்களில் தனிச்சிறப்புமிக்க மகாபாரதத்தின் அடிநாதமாக இழையோடுவது முழுமையின்மை என்ற உணர்வே ஆகும். கதைமாந்தர்களின் வெற்றி-தோல்விகளினூடே இதை நம்மால் தெளிவாகவே உணர முடியும். எண்ணற்ற கதைமாந்தர்களைக் கொண்ட மகாபாரதம் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரத்தினங்களைத் தொடர்ந்து பலரும் வெளியே எடுத்துப் பட்டை தீட்டி ஒளிரச் செய்யும் நூல்களை எழுதிவந்துள்ளனர். அந்த வரிசையில் புனே டெக்கான் கல்லூரி ஆய்வு நிறுவனம் தொகுத்த மகாபாரதத்தின் தொகுதிகளுக்கு வழங்கிய பங்களிப்பின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு, மானுடவியல்-சமூகவியல் பேராசிரியரான ஐராவதி கார்வே எழுதிய நூல்தான் இது. மகாபாரதம் இந்திய மானுடவியலுக்கு எண்ணற்ற கருத்துரைகளை வாரி வழங்கிவரும் பின்னணியில், கிரேக்கத் தொன்மக் கதைகளை ஒப்பிட்டு கார்வே இந்நூலில் தரும் விளக்கங்கள் தனித்துவம் மிக்கவை. காலந்தோறும் மனித இனத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எழுத்திலக்கியம் பதிவுசெய்துவந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும்போது, மகாபாரதம் பதிவுசெய்திருந்த மாற்றங்களை அவர் எடுத்துக் கூறியுள்ள விதம் வாசகர்களை இந்த இதிகாசக் கடலில் மேலும் மேலும் மூழ்கி முத்தெடுக்க வைக்கிறது. இந்தப் புத்தகம் தமிழில் சாகித்ய அகாடமி வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கிறது.
- வீ.பா. கணேசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT