Published : 09 Dec 2017 10:09 AM
Last Updated : 09 Dec 2017 10:09 AM

நல்வரவு: வேதாந்தம் இனிது

‘தமிழ் நவீனக் கவிதைகளின் இருத்தலியலென்பது அதன் புரியும் தன்மையிலான கேள்வி விளக்கங்களிலிருந்தல்ல, அதன் அனுபவப் பரப்பிலான சூட்சுமமான புதிர்த்தன்மையிலிருந்தே உருக்கொள்கின்றன’ எனும் புரிதலோடு கவிதைகள் எழுதிவரும் கவிஞரின் இரண்டாவது கவிதை நூல். ‘சொற்களுக்கென வெட்டப்பட்ட மரங்கள் / மனதிற்கு மிக நெருக்கமான துயர்பாடல்களினால் / மீண்டும் விதைகளாகின்றன / மரங்களாகின்றன / சொற்களாகின்றன / மீண்டும்’ போன்ற வாழ்வின் துளிர்த்தலைச் சின்னச் சின்ன வரிகளில் வெளிப்படுத்தும் கவிதை வரிகள் நிறைந்த தொகுப்பு. நூல் கட்டமைப்பும் கூடுதல் அழகு.

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள் | ஜீவன் பென்னி

விலை: ரூ.90

மணல்வீடு, ஏர்வாடி-636453 | 9894605371

நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் பேசுபவரை, ‘வேதாந்தம் பேசுபவன்’ என்று சொல்லும் வழக்கமும், ‘வேதாந்தம் படித்தல் கடினமானது’ எனும் எண்ணமும் இன்னமும் இருக்கிறது. ‘வேதாந்தம் எனும் சொல்லுக்கு வேதங்களின் முடிவு’ என்று சுவாமி விவேகானந்தர் பொருள் கூறியுள்ளார். ‘வேதம்+அந்தம்’ எனப் பிரித்தால், வேதங்களின் தொடர்ச்சியைக் குறிப்பதான பொருளைத் தந்தாலும், இவை வேதங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணாகவே இருக்கின்றன. சாதி, மத, இன பேதமின்றி ஒரே ஆன்மா எனும் மெய்ப்பொருள் தத்துவத்தை வெளிப்படுத்தும் வேதாந்தம் குறித்த 22 எளிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு.

வேதாந்தம் இனிது | டாக்டர் எ.கொண்டல்ராஜ்

விலை: ரூ.130

சந்தியா பதிப்பகம், சென்னை-40 | 044-24896979

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் எழுதியுள்ள 14 கட்டுரைகள் அடங்கிய நூல். கல்விச் சூழல் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் நம்பிக்கையை விதைக்கும் கட்டுரைகள். வகுப்பறையே வாழ்வியல் பயிலகம், பள்ளிக்கூடமே பண்பாட்டுப் பாசறை, வாசிப்பை நேசிப்போம், தேர்வுகளே தீர்வுகள் ஆகா, இயற்கையைக் காக்க இயக்கமாய் மாறுவோம், பசுமைப் புரட்சியின் பக்க விளைவுகள் எனும் தலைப்பிலான கட்டுரைகள், இன்றைய சமூகம் உடனடியாக சிந்திக்க வேண்டியவை பற்றிய அக்கறையை விதைக்கின்றன.

வாருங்கள்… வாகை சூடலாம் | மு.சிவானந்தம்

விலை: ரூ.120

நிலா பதிப்பகம், அறந்தாங்கி-6614616 | 9976662486

முன்பருவக் கல்வி முறையை விட குழந்தைகளுக்கு அவரவர் இல்லங்களே சிறந்தவை. அங்கே குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்வார்கள். எனவே, 5 வயதுக்கு முன்பாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், சமூகம் சார்ந்து வீட்டிலேயே நிறைய கற்றுத்தரலாம். சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தல்களைக் கண்டு பயப்படாமல் தைரியமாகவும், சிந்தித்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும், நம் வளர்ச்சிக்கு நிறைய கேள்விகளை கேட்க வேண்டும். இரக்கம், மனிதநேயம் போன்ற நற்பண்புகளை எப்போதும் விட்டுவிடாமல், எல்லோருக்கும் பயன்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கான அறிவுரைகள் கதை மூலமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பைடர் மேன் | க.சரவணன்

விலை: ரூ.70

பாரதி புத்தகாலயம் சென்னை- 18 | 044-24332424.

- தொகுப்பு: மு.முருகேஷ், இரா.கோசிமின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x