Last Updated : 26 Jul, 2014 12:00 AM

 

Published : 26 Jul 2014 12:00 AM
Last Updated : 26 Jul 2014 12:00 AM

கலைஞர்களுக்குக் கவுரவம்

இசைக் கலைஞர்களின் சொர்க்கம் சென்னை என்றால் சென்னை இசைச் சூழலின் மையமாக மியூசிக் அகாடமியைச் சொல்லலாம். உலகின் எந்த மூலையில் கர்நாடக இசைக் கலைஞர் இருந்தாலும் அவருக்கு அகாடமியில் இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது கனவாகவும் கௌரவமாகவும் இருந்து வருகிறது.

நூற்றுக்கணக்கான சபாக்கள் இருந்தாலும் தனிச் சிறப்பு வாய்ந்த சபாக்களில் ஒன்றாக இசைப் பிரியர்களால் கொண்டாடப்படும் மையமாகவும் அகாடமி திகழ்கிறது. அகாடமி தரும் விருதுகளுக்கு இருக்கும் மதிப்பே அகாடமியின் பெருமையைக் கச்சிதமாக உணர்த்திவிடுகிற்து.

மியூசிக் அகாடமியின் செயற்குழு, அகாடமியின் 88-வது ஆண்டு இசை, நாட்டிய விழா விருதுகளை அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பிரபல மிருதங்கம் மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் பெறுகிறார்.

இசை ஆசிரியர்களுக்கான விருதான ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருது வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் மாங்காடு கே. நடேசன், அலமேலு மணி ஆகியோருக்கும், ‘டி.டி.கே. விருதுகள்’ வாய்ப்பாட்டுக் கலைஞர் மல்லாடி சூரிபாபு, நாம சங்கீர்த்தனக் கலைஞர் உடையாளூர் கல்யாண ராமன் ஆகியோருக்கும், ‘இசைப் பேரறிஞர்’ விருது டாக்டர் பத்மா மூர்த்திக்கும், வயலின் இசைக்கான ‘பாப்பா வெங்கடராமய்யா’ விருது லால்குடி ராஜலட்சுமிக்கும் வழங்கப்படவுள்ளன.

மியூசிக் அகாடமியின் 88-வது இசை விழா வரும் 2014 டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 2015 ஜனவரி 1-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இசைக்கான விருதுகள் 2015 ஜனவரி 1-ம் தேதி வழங்கப்படும் என்று அகாடமியின் தலைவர் என். முரளி தெரிவிக்கிறார்.

நாட்டியத்துக்கான ‘நாட்டிய கலா ஆச்சார்யா’ விருது புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் நடன குருவுமான லீலா சாம்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக் அகாடமியின் நாட்டிய விழாவின் தொடக்க நாளான 2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்கிறார் முரளி. விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்பதையும் பெருமிதத்தோடு அவர் தெரிவிக்கிறார்.

அகாடமியின் விருது வழங்கப்பட்ட கலை ஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நாலா பக்கங்களிலிருந்தும் குவிந்தவண்ணம் உள்ளன. எத்தனையோ விருதுகள் இருக்க, மிகவும் கவனிக்கப்பட்டு மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாக அகாடமி விருது இருப்பதன் ரகசியம் என்ன? “அன்றைய இளைஞர்கள் என்றும் இளைஞர்களாக இன்றும் மியூசிக் அகாடமியின் ரசிகர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பதே இதன் பலம்” என்கிறார் முரளி.

அகாடமி அன்றுமுதல் இன்றுவரை தன் தரம் மாறாமலும் காலத்துக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இருப்பதன் பின்னணியைத் தன் சொந்த அனுபவத்திலிருந்து முரளி விளக்கு கிறார். “2005-ம் ஆண்டில் மியூசிக் அகாடமியின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. அப்பொழுது வானமே பிளந்தாற்போல் மழை கொட்டத் தொடங்கியது.

நான் தலைவர் பதவிக்காக முதன் முதலில் போட்டியிட்டிருந்த தருணம் அது. யார் வந்து ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று எண்ணி இருந்த வேளையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சாரிசாரியாக மழையில் நனைந்த

வண்ணம் வந்து ஒட்டுப் போட்டு என்னைத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்” என்று சொல்லும் முரளி, மியூசிக் அகாடமியின் உறுப் பினர்கள் அகாடமி விஷயத்தில் எவ்வளவு அர்ப் பணிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டதாகச் சொல்கிறார். “இத்தகைய உறுப்பினர்களைப் பெற்றுள்ள இந்த அமைப்பின் பாரம்பரியம் மாறாமல் பாது காத்தபடி, பல புதுமைகளைப் புகுத்துவது காலத்தின் கட்டளை என்று உணர்ந்த நேரம் அது. அதைச் சிரமேற்கொண்டு செய்துவருகிறேன்” என்கிறார் நான்காம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முரளி.

மியூசிக் அகாடமியின் ஒலி அமைப்பு காலத்துக் கேற்ப மாற்றப்பட்டு வருகிறது. தற்போது `பாஸ்’ தொழில்நுட்பத்துடன் அமைந்த உள்கட்டமைப்புகள் காரணமாக அரங்கில் எங்கிருந்து கேட்டாலும் இசைக் கோலங்கள் உடைபடாமல், சிதையுறாமல், ரசிகர்களின் காதுகளைச் சென்று சேருகின்றன.

2008-ம் ஆண்டிலிருந்து மியூசிக் அகாடமி யின் மலர், ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியிடப் பட்டு வருகிறது. இசைக் கலைஞர்கள் கர்நாடக இசையின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள வசதியாக சங்கீத சம்பிரதாய பிரதர்ஷிணி என்னும் நூல் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் நான்காம் பாகம் வெளிவரவுள்ளது.

இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் சிறந்த முறையில் இசையைக் கற்றுத்தரும் பள்ளி களில் ஒன்றாகவும் அகாடமி விளங்குகிறது. இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பல மையங்கள் சபா எனப் பெயர்பெற்றிருந்தாலும் இது அகாடமி எனப் பெயர் தாங்கியிருப்பது கல்வித் துறையில் இது காட்டும் சிறப்பான கவனத்தைச் சொல்லிவிடுகிறது.

இசை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பது, இசை விவாதம் போன்ற பல தளங்களில் இயங்கியதாலேயே சங்கீத வித்வத் சபா என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பு ஆங்கிலத்தில் மியூசிக் அகாடமி என வழங்கப்படுகிறது என்று சொல்லலாம் என்கிறார் முரளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x