

யோகாசனம் செய்தபடி மலையேறிய சிறுமி ஹனா.
நாமக்கல்: சேலத்தைச் சேர்ந்த சிறுமி ஹனா, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலின் 1,300 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேறி சாதனை படைத்தார்.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜூபேர் அகமது, அதியா பானு தம்பதியனர். இவர்களது மகள் ஜி.ஹனா. சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சேலம் சிவகுரு யோகாசன சாலையில் ஆசிரியர் முரளி என்பவரிடம் யோகாசனம் பயின்று வருகிறார்.
இச்சிறுமி சனிக்கிழமை அன்று திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோயிலில் தொடங்கி மலை உச்சியில் உள்ள அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு செல்லும் 1,300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார்.
ஒவ்வொரு படிக்கட்டாக வெவ்வேறு வகையான யோகாசனங்களை செய்தபடி சிறுமி மலையேறினார். காலை 6.45 மணிக்கு முதல் படிக்கட்டில் தொடங்கிய சிறுமி ஹனா காலை 10.30 மணிக்கு 1,300 படிகளையும் கடந்து சாதனை படைத்தார்.
இதுகுறித்து சிறுமி ஹனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பயின்று வருகிறேன். யோகா மாஸ்டர் முரளி ஏதாவது சாதிக்க வேண்டும், பெற்றோரை மதிக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்துவார். அதன்படி அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலின் 1300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலை ஏறி இருக்கிறேன்.
விருச்சகசனா, கருடாசனா, பூரண தனுராசனா, சக்கராசனா, நின்ற பாத ஆசனா, வீராசனா, அர்த்த கோண ஆசனா, அர்த்த சலபாசனா என பல்வேறு ஆசனங்கள் செய்தபடி மலையேறினேன். மேலும் பல முயற்சிகள் செய்து சாதனை படைப்பேன் என்றார்.
சிறுமி ஹனா யோகசனம் செய்தபடி அர்த்தநாரீஸ்வரர் கோயில் படிக்கட்டுகளில் ஏறியதை பக்தர்கள் வியப்புடன் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.