

குவாஹாட்டி: அசாமில் மசூதி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்து தண்ணீரில் மூழ்கும் வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரை இமாம் ஒருவர் காப்பாற்றினார்.
அசாம் மாநிலத்தின் பூமி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடியிருந்த நிலையில் வாகனம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. இதற்கிடையில் விபத்து சத்தம் கேட்டு அருகில் இருந்த மசூதியின் இமாம் அப்துல் பாசித் வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே ஒலிபெருக்கியில் கிராம மக்களை அழைத்தார். இதையடுத்து சில நிமிடங்களில் அங்கு ஓடிவந்த கிராம மக்கள் குளத்தில் குதித்து வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரையும் உயிருடன் மீட்டனர்.
இமாம் அப்துல் பாசித்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் நேரடியாக வந்து பாராட்டு தெரிவித்தார். இமாம் அப்துல் பாசித்தை கவுரவிக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். வாகனத்தில் இருந்தவர்கள் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். அசாமின் சில்சாரில் இருந்து திரிபுரா நோக்கி செல்லும்போது இந்த விபத்தில் சிக்கினர்.