என்றென்றும் புன்னகை, கலகல பேச்சு... மக்களின் மனம் கவர்ந்த பேருந்து ஓட்டுநர் ஜோசப் மச்சாடோ!

34 ஆண்டு கால பணிக்குப் பின் ஓய்வு
என்றென்றும் புன்னகை, கலகல பேச்சு... மக்களின் மனம் கவர்ந்த பேருந்து ஓட்டுநர் ஜோசப் மச்சாடோ!
Updated on
2 min read

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) மூத்த பேருந்து ஓட்டுநரான ஜோசப் மச்சாடோ 34 ஆண்டு கால சிறப்பான மற்றும் களங்கமற்ற பணிக்காக மக்களாலும் நிர்வாகத்தாலும் பெரிதும் பாராட்டுகளை ஈர்த்த ஓட்டுநர்.

இதில் 22 ஆண்டுகள் வோல்வோ பேருந்து இயக்கிய அவர், தனது பணிக்காலத்தை எந்தவித விபத்தும் ஏற்படுத்தியதில்லை. மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத சாதனை ஓட்டுநர் என்ற மனநிறைவுடன், மக்களாசியுடன் மே 30-ம் தேதியன்று ஓய்வு பெற்றுள்ளார் மச்சாடோ. உடுப்பி மாவட்டத்தின் உத்யாவராவைச் சேர்ந்த ஜோசப் மச்சாடோ, 2002-ஆம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. வோல்வோ பேருந்துகளை அறிமுகப்படுத்தியபோது தேர்வு செய்யப்பட்ட முதல் ஓட்டுநர்கள் குழுவில் ஒருவராக இருந்தார்.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த சேவை பின்னர் மங்களூருவுக்கும் விரிவாக்கப்பட்டது. தனது பணிக்காலத்தில் பல்வேறு உயர்தர மற்றும் சொகுசுப் பேருந்து சேவைகளை அவர் இயக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் ஊருக்குக் கூட்டிச் சென்ற மச்சாடோவுக்கு, ஓய்வுக்கு முன்னதாக சக ஊழியர்கள் மற்றும் அவரை நேசித்த பயணிகள் சிறப்பான பிரியாவிடை அளித்தனர். மே 29 அன்று மும்பை – மங்களூரு ஏராவத் கிளப் கிளாஸ் பேருந்தை இயக்கியபோது, அவருக்கு அன்பான பிரியாவிடை வழங்கப்பட்டது.

அவரை நன்கு அறிந்த பயணிகள், “எப்போதும் புன்னகையுடன் இருப்பவர், பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்வவர், ஒருபோதும் தாமதமாக வராதவர், வேகமாகவோ ஆபத்தாகவோ வாகனம் ஓட்டாதவர்” என்று பாராட்டினர். மங்களூரு, புனே, மும்பை மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் பயணித்த எண்ணற்றோர், அவரது பாதுகாப்பான ஓட்டுநர் திறமையாலும் கனிவான அணுகுமுறையாலும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பெற்றதாக தெரிவித்தனர்.

1992-ஆம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சியில் பணியில் சேர்ந்த மச்சாடோ, முதலில் குந்தாபுரா பணிமனையில் நியமிக்கப்பட்டார். அப்போது கொல்லூர் – சென்னை ராஜஹம்சா சேவையை இயக்கிய அவர், பின்னர் அது வோல்வோ பேருந்து சேவையாக மேம்படுத்தப்பட்டபோதும் தொடர்ந்து பணியாற்றினார். 2008-ஆம் ஆண்டில் மங்களூரு பணிமனைக்கு மாற்றப்பட்ட அவர், மங்களூரு – சென்னை ஏராவத், மங்களூரு – மும்பை ஏராவத் மற்றும் மங்களூரு – புனே அம்பாரி உத்சவ் உள்ளிட்ட முக்கிய சேவைகளில் ஓட்டுநராகப் பணியாற்றினார்.

தனது கடைசி பணியாக மே 29 அன்று மும்பை – மங்களூரு ஏராவத் கிளப் கிளாஸ் பேருந்தை இயக்கியதாக அவர் கூறினார். 2018-ஆம் ஆண்டு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, ஆறு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி அரசுப் போக்குவரத்துக் கழகம் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், சக ஊழியர்கள் மற்றும் மங்களூரு மூத்த பிரிவு கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் ஷெட்டி ஆகியோரின் அன்பும் ஒத்துழைப்பும் தனது பணிக்காலத்தை இனிமையாக்கியது என்றார்.

ஜோசப் மச்சாடோவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மணிப்பாலில் பி.எஸ்சி படித்து வருகிறார். தனது நீண்ட பணிப் பயணத்தை நிறைவு செய்துள்ள மச்சாடோ, பயணிகளின் அன்பும் மரியாதையும் தன்னுடைய மிகப்பெரிய சொத்து என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

ஓர் ஓட்டுநர் இவ்வாறு 34 ஆண்டுகாலம் களங்கமற்ற விதத்தில் பணியாற்றி, மக்களின் அன்பையும் நேயத்தையும் வெல்வது என்பது அனைவருக்கும் இயலாத ஒன்று. அந்த விதத்தில் மச்சாடோவின் பணி ஒரு ரோல் மாடலாகப் பார்க்கப்படுகிறது.

என்றென்றும் புன்னகை, கலகல பேச்சு... மக்களின் மனம் கவர்ந்த பேருந்து ஓட்டுநர் ஜோசப் மச்சாடோ!
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in