

புதுடெல்லி: வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்கு, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதிக பாசத்துடன் பழகுவதால் அவை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே மாறிவிடுகின்றன. சிலர் நாய்களுக்கு பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டி மகிழ்கின்றனர்.
தற்போது ஒரு குடும்பம் அதையும் தாண்டி, செல்ல நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. விரைவில் குட்டி போடப் போகும் தங்கள் வீட்டு நாயை புத்தாடை, மாலை, ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்தனர்.
நண்பர்கள், உறவினர்கள்,முன்னிலையில் வளைகாப்பு சம்பிரதாயங்கள் முறைப்படி நடத்தப்பட்டன. செல்ல நாய்க்கு அதன் முகத்தில் உரிமையாளர் மஞ்சள் பூசி நலுங்கு வைத்தார். அந்த நாயும் மகிழ்ச்சியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது. ”தாயாகப் போகிறாள்” என்ற தலைப்பில் இன்ஸ்டா கிராமில் வெளியான இந்த வீடியோ பலரை கவர்ந்தது.
அவர்கள் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினரை பாராட்டியுள்ளனர். மனிதர்களைப்போல் செல்லப் பிராணிகளையும் மக்கள் நேசித்து மகிழ்வது அழகான கொண்டாட்டம் என ஒருவர் பதிவிட்டுள்ளார். ”விலங்குகளை இது போல் நேசிப்பவர்கள் பரிசுத்தமான இதயம் கொண்டவர்கள்” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.