

திருச்சி: 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ரிபாயா சிலம்பம் சுற்றுதலில் உலக சாதனை படைத்துள்ளார்.
திருச்சி, பொன்மலை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த தம்பதிகளான ஜகபர்அலி-பர்வீன் பானு மகள் ரிபாயா (12). இவர் திருச்சி சமது உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பக் கலை ஆசான் வீ.தங்கராஜிடம் சிலம்பப் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர் உலக சாதனை படைக்க முயற்சி செய்து வந்தார்.
இதற்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவி தொடர்ந்து 8 மணிநேரம் சிலம்பம் சுற்றியது சாதனையாக இருந்தது. இதை முறியடிக்கும் வகையில் திருச்சியில் மே 27-ம் தேதி காலை முதல் மாலை வரை ஆசான்கள் வீ.தங்கராஜ், டிராகன் ஏ.ஜெட்லி முன்னிலையில் 10 மணி நேரம் 10 நிமிடம் 10 நொடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.
இதன் மூலம் இச்சாதனைக்காக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். மேலும், இந்தச் சாதனை குறித்த ஆவணங்கள் எவரெஸ்ட் வேல்ட் ரெக்கார்டு, ஏசியன் பசிபிக் ரெக்கார்டு அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், சாதனை படைத்த ரிபாயாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.