

பெங்களூரு: கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகி விவாதப் பொருளானது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பான வீடியோவை கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், கணவர் சதீஷின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை நெற்றியில் டாட்டூவாக அவர் போட்டுக்கொண்டார் என்று கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
கடந்த மார்ச் 18-ம் தேதி வெளியான இந்த வீடியோவை இதுவரை 1.25 கோடி பேர் பார்த்திருந்தனர். மேலும் 2.6 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் போட்டிருந்தனர்.
கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்ணுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். கணவர் மீது கொண்ட அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் அந்த பெண்ணைத் திட்டி வந்தனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் கூறும்போது, “இதை முட்டாள்தனம் என்று சொல்வதைத் தவிர வேறில்லை. அக்கறை, பாசம், முன்னுரிமை, எதுவாக இருந்தாலும் அவருடன் இருப்பது, ஆதரவளித்தல், மேம்படுத்துதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றால்தான் அன்பு உணரப்பட வேண்டும்” என்று தெரிவிதிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த வீடியோ தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். நான் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோவின் உரிமையாளர் சதீஷ், "அந்த வீடியோவில் வரும் பெண் எனது மனைவிதான். நாங்கள் ஒரு விளம்பரத்துக்காகவே அவ்வாறு நெற்றியில் டாட்டூ இட்டதுபோல் வீடியோ செய்தோம். அது அப்போதே வைரலானது. தற்போது மீண்டும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் அந்த டாட்டூ நிஜமானது அல்ல. இப்போது என் மனைவியின் நெற்றியில் எந்த டாட்டூவும் இல்லை" என்று கூறியுள்ளார்.