

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் இன்று பண்டைகால சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு நடைபெற்றுவரும் தொல்பொருள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
அகழாய்வில் கிடைத்த இப்பொருள்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் வெம்பக்கோட்டையில் அகழாய்வு நடைபெறும் பகுதியில் தொல்பொருள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி இக்கண்காட்சியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் திறந்துவைத்தனர். இக்கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்காக வெம்பக்கோட்டையிலிருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் ஏராளமானோர் இக்கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து ஏராளமான பழங்கல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பழமையான நாகரீகத்தையும், கலை நுணுக்கத்தையும் விளக்கும் வகையில் முன்னோர்கள் பயன்படுத்திய சங்கு வளையல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பகுதியில் இதுபோன்ற அரிய பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.