Published : 27 Apr 2023 01:20 PM
Last Updated : 27 Apr 2023 01:20 PM

'ஆர்சிபி வெல்லும் வரை பள்ளிக்கூடத்திற்கு முழுக்கு!' - பதாகை மூலம் கவனம் ஈர்த்த சிறுமி

பதாகையுடன் அந்த சிறுமி

பெங்களூரு: ராயல் சேலஞ்ச் பெங்களூரு (RCB) அணி, அதன் ரசிகர்களுக்காக இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மைதானத்திலும் உள்ளூரை சேர்ந்த அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. சமூக வலைதளம் உட்பட வெகுஜன மக்களின் கவனத்தை பெற மைதானத்தில் போட்டியை நேரில் பார்க்கும் ரசிகர்கள், தனித்துவமிக்க செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிஞ்சு பாதங்களைக் கொண்டு அழகாக நடை போட துவங்கியுள்ள சிறுமி ஒருவர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.

ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்து அந்த சிறுமி கையில் ஏந்தி இருந்த பதாகைதான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளாகி உள்ளது. 'ஆர்சிபி வெல்லும் வரை பள்ளிக்கூடத்திற்கு முழுக்கு!' என அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அந்த சிறுமியின் பெற்றோரது கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அதன் மூலம் அந்த சிறுமி கவனம் பெற்றுள்ளார்.

இதற்கு சமூக வலைதளத்தில் மும்முரமாக இயங்கும் நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர். ‘ஆர்சிபி, இந்த பாப்பாவுக்காக வேண்டி கோப்பையை இந்த முறை வெல்லுங்கள் ப்ளீஸ்!’ என்பதே பலரும் சொல்லி வரும் கருத்தாக உள்ளது.

கடந்த 2008 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூரு அணி தலா 4 வெற்றி மற்றும் தோல்விகளை சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x