கீழடி அகழ் வைப்பகத்தில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் முறை: உதயச்சந்திரன் தகவல்

கீழடி அகழ் வைப்பகத்தில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் முறை: உதயச்சந்திரன் தகவல்

Published on

திருப்புவனம்: கீழடி அகழ் வைப்பகத்தில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் முறை செயல்படுத்தப்படும், என சிறப்பு செயலாக்க திட்டச் செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் நேற்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொந்தகையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: கீழடி அகழ் வைப்பகத்தை பார்வையிட வருபவர்கள் வசதிக்காக கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் முறை, சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை வைக்க பாதுகாப்பு அறை, அகழ் வைப்பகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் செல்லும் வழியை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், தொன்மை குறிப்புகளை பார்வையாளர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட உள்ளனர். வார விடுமுறை நாட்களில் பார்வையிடும் நேரத்தை ஒரு கூடுதலாக அதிகரிக்கவும், கூடுதல் கழிப்பறைகளை கட்டவும், சுயஉதவிக் குழுக்களின் சிற்றுண்டி உணவகம் மூலம் தரமான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறப்பு செயலாக்க திட்டச் செயலாளருடன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, தொல்லியியல் துறை ஆணையர் சிவானந்தம், கட்டிட முதன்மைப் பொறியாளர் விஸ்வநாத் ஆகியோர் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in