Published : 20 Apr 2023 09:11 PM
Last Updated : 20 Apr 2023 09:11 PM

சிவாஜி கணேசன் குறித்த ஆய்வு நுால் யாழ். பல்கலையில் அறிமுகம் | ராம்குமாா் கணேசன் கலந்துகொள்கிறாா்

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா், முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய நூல் ‘சிவாஜி கணேசன்’. கடந்த ஜனவரியில் வெளியான இந்நுால், நடிகர்கள் திலகத்தின் ரசிகர்கள், அபிமானிகள் ஆகியோரிடமும் பொது வாசகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது. இந்நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற இருக்கின்றது.

நடிகா் திலகத்தின் மூத்த மகனும் சிவாஜி புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருமான ராம்குமாா் கணேசன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தருகின்றாா்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடக்கவுரையை இந்தியத் துணைத் துாதுவா் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்துவாா். அதனைத் தொடா்ந்து ‘நீங்கா நினைவில் சிவாஜி’என்ற தலைப்பில் பேராசிரியா் சி. சிவலிங்கராஜாவின் சிறப்புரை இடம்பெறும்.

நுாலாசிரியா் அறிமுகத்தை சிவா பிள்ளை நிகழ்த்த, நுால் அறிமுக உரையை முனைவா் கா.வெ.செ.மருதுமோகன் நிகழ்த்துவாா். யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் சி.சிறீசற்குணராஜா நுாலை வெளியிடுவாா். ராம்குமாா் சிவாஜி கணேசன் பிரதிகளைக் கையளிப்பாா்.

முனைவா் கோ.சகாதேவி, முத்தையா பிள்ளை சிறிகாந்த், தேவராயபிள்ளை லெட்சுமணன்ராஜ், டாக்டா் சதீஸ்குமாா் சிவலிங்கம், முனைவா் மதிவாணன் ஆகியோா் வாழ்த்துரைகளை வழங்குவாா்கள்.

இதனைத் தொடா்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக இலங்கை, இந்திய பேச்சாளா்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெறும். செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலி லலீசன் இதற்குத் தலைமைதாங்குவாா்.

ஆா்வமுள்ள அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்று ஏற்பாட்டாளா்கள் பொதுமக்களை அழைக்கின்றாா்கள். அனுமதி இலவசம். இந்நிகழ்வை சிவா பிள்ளை ஒருங்கிணைப்பு செய்துள்ளார். அவரை pillaisiva@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரில் தொடர்பு கொண்டு மேல் விவரங்களை அறியலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x