உடல் உஷ்ணத்தை தணிக்கும் முலாம் பழம் விற்பனை ஓசூரில் அதிகரிப்பு

ஓசூரில் சாலையோரக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முலாம் பழங்கள்.
ஓசூரில் சாலையோரக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முலாம் பழங்கள்.
Updated on
1 min read

ஓசூர்: உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் முலாம் பழம் விற்பனை ஓசூரில் அதிகரித்துள்ளது.

ஓசூரில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நா வறட்சியைப் போக்க பொதுமக்கள் பழச்சாறு, இளநீர், கம்பங்கூழ், நீர் சத்துகள் நிறைந்த தர்பூசணி, முலாம் பழம் ஆகியவற்றை அதிகளவில் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.

குறிப்பாக உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் முலாம் பழத்தை மக்கள் அதிகம் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். நடப்பாண்டில், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து அதிக அளவில் முலாம் பழம் ஓசூர் பகுதிக்கு விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளது. அங்கு மகசூல் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வாகனங்கள் மூலம் விற்பனைக்குச் செல்கிறது.

இதனால், ஓசூர் சந்தைகளில் முலாம் பழம் வரத்து அதிகரித்து, ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல, சாலையோரக் கடைகளிலும் அதிகளவில் குவிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in