Published : 11 Apr 2023 07:11 PM
Last Updated : 11 Apr 2023 07:11 PM

“அதிகரிக்கும் வெயில்... மது, டீ, காபியை தவிர்ப்பீர்!” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கிய ஹெல்த் டிப்ஸ்

விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர்

சென்னை: வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறை சார்பில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியார்களிடம் கூறுகையில், "கோடை வெப்பம் தாக்க துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு சுய நினைவு இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். CRS கரைசல் பருகு வேண்டும். எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரி காய்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை அணியவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதயநோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வெயில் காலங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்ந்து காணப்படுதல் போன்ற அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 அவசர எண்ணை அழைத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும். உதவிக்காக காத்திருக்கும்போது அந்த நபரை உடனடியாக குளிர்விக்கவும், முடிந்தால் குளிர்ந்த இடத்திற்கு நகர்த்த வேண்டும்.

இந்தக் காலங்களில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசயானக் கற்களை வைத்து பழுக்க வைப்பார்கள். அதேபோல் வாழைப்பழங்களைக் கூட பழுக்க வைப்பதற்கு இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படுகிறது. தர்ப்பூசணி பழத்தில் கூட ஊசி போட்டு உள்ளே இருக்கிற அந்தப் பழத்தை நன்கு சிவந்த நிலையில் உருவாக்கிட வேண்டுமென்பதற்காக ஊசி போடுகிறார்கள். இது, எந்த அளவுக்கான பாதிப்பை குழந்தைகள் எதிர்கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமாலேயே இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கும் இந்த கோடைகாலத்தில் இந்த துறையின் சார்பில் விடுக்கிற வேண்டுகோள் பழங்களை பழுக்க வைப்பதற்கு இரசயானம் மூலம் பழங்களை பழுக்க வைத்து அதன் மூலம் மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை உருவாக்குவதற்கு நோக்கமாக இருக்க கூடாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிற ஒரு சில வியாபாரிகள் நிச்சயம் அந்த தவறை எந்தக் காலத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது போன்ற பழங்கள் விற்பனை செய்யப்படுகின்ற இடங்களில் ஆய்வு செய்து அதிகமான கெடுபிடிகளைச் செய்து தொல்லை கொடுக்காமல் எங்கு இந்தமாதிரியான தவறுகள் ஏற்படுகிறதோ அந்த இடங்களுக்கு சென்று அவற்றைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துறையின் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார். இதுசம்பந்தமாக பொது மக்களுக்கு எங்கேயாவது சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் ஆப் எண்.94440 42322 என்ற தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கும் போது உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x