

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கல்லூரி மாணவி ஒரு ஏ4 தாளில் 135 கோயில்களை பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைந்துள்ளார்.
தஞ்சாவூர் வட்டம் வல்லம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர்கள் ஐய்யப்பன் - சசிகலா தம்பதியினர். இவர்களது யமுனா (19) உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். யமுனா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும்போது, ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். இந்நிலையில், இவர் ஏ4 தாளில், பேனாவை மட்டுமே பயன்படுத்தி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 135 கோயில்களை வரைந்துள்ளார். அவரின் ஓவியத்தைப் பார்த்து கல்லூரி நிர்வாகம், பொதுமக்கள் என பலரும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து யமுனா கூறியது: ”சிறு வயதில் இருந்தே ஓவியம் வரையப் பழகி வருகிறேன். கடந்த ஒரு மாதமாக, ஏ4 வடிவிலான தாளில், தமிழகத்தில் உள்ள கோயில்களை பென்சில், ரப்பர் இல்லாமல், பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைய வேண்டும் என முயற்சி செய்து வரைந்துள்ளேன். இதனை சாதனை முயற்சியாகப் பதிவு செய்ய முயன்று வருகிறேன். அடுத்ததாக ஏ3 வடிவிலான தாளில், இந்தியாவில் உள்ள 300 கோயில்களை வரையப் பயிற்சி எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.