குமரி முதல் இமயம் வரை தனி ஒருவனின் மாட்டுவண்டிப் பயணம் - விவசாயத்தைக் காக்க வலியுறுத்தல்

குமரி முதல் இமயம் வரை தனி ஒருவனின் மாட்டுவண்டிப் பயணம் - விவசாயத்தைக் காக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

விருதுநகர்: விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தனி ஒருவராய் மாட்டு வண்டியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3600 கி.மீட்டர் பயணத்தைத் தொடங்கியுள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (32). பட்டதாரி இளைஞரான இவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர். திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளனர். தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த ஜனவரி 1ம் தேதி கன்னியாகுமரியில் தனது மாட்டு வண்டி பயணத்தை தொடங்கினார். இந்த மாட்டு வண்டி மூலம் 3,600 கி.மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் தனது பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் சந்திரசூரியன். அதன்படி பயணத்தின் ஒருபகுதியாக அவர் விருதுநகர் வந்தடைந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், "இன்றைய இளம் தலைமுறையினர் தமது பாரம்பரியமான விவசாயத்தை மறந்து வேலைத்தேடி அண்டை மாநிலத்திற்கும் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு அடிமையாக வேலை செய்கின்றனர். மேலும், இன்றைய தலைமுறையினர் விவசாயம் செய்வதை கற்றுக்கொண்டு விவசாயம் செய்தால்தான் நம் நாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும் என்றும், விவசாய பொருள்களுக்கு போதிய விலையை மத்திய மாநில, அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அதோடு, நாட்டு இன மாடுகளின் அழிவால் இயற்கை உரங்கள் அடியோடு அழிந்து ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் வந்து நம் மண்ணையும், மண்ணில் வாழ்ந்த நுண்ணுயிர்களையும் அழித்துவிட்டன என்றும், எனவே அழிந்து வரும் நாட்டு இனமாடுகளைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடக்கை எடுக்க வேண்டும் என இந்த மாட்டு வண்டி பயணத்தின்போது எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in