

நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர் தரும் ஆலோசனைகள்:
* நமது உடல் 70 சதவீதம் நீராலானது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும்.
* உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
* குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
* எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படியென்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும்.
* அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். இது உடல்நலனை பாதிக்கும். கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும்.
* மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் (Thirst Center) உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது.
* 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது. அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது.
* குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும்.
தொகுப்பு: வா.ரவிக்குமார்