

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
இங்கு வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன் நேற்று கள ஆய்வில் ஈடுபட்ட போது, மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.
இது குறித்து அவர் கூறியது: பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள மந்தைவெளி பகுதியில் கள ஆய்வு செய்தோம். அப்போது முக்கால்வாசி அள விற்கு சிலை ஒன்று மண்ணில் புதைந்திருந்தது. இதனை துர்க்கை என அப்பகுதியினர் வணங்கி வந்தனர்.
கிராம மக்களின் ஒத்துழைப்புடன் சிற்பத்தின் முன் இருந்த மண் முழுவதும் அகற்றப்பட்டது. அப்போது அது மூத்ததேவி சிற்பம் எனக் கண்டறியப்பட்டது. காக்கை கொடியுடனும் மகன் மாந்தன், மகள் மாந்தியுடனும் வலது காலை தொங்கவிட்டும் இடது காலை காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் மூத்ததேவி அழகாகக் காட்சி தருகிறார்.
அவளது இடது கரம் தொடை மீதும் வலது கரம் அபய முத்திரையுடனும் அமைந்துள்ளது. வழக்கமான மூத்ததேவி சிற்பங்களில் காணப்படும் பெருத்த வயிறு, அகட்டியக் கால்கள் இங்குக் காணப்படவில்லை. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.12-13-ம் நூற்றாண்டு என்பதை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
வடமொழியில் ‘ஜேஷ்டா’ என்று அழைக்கப்படும் மூத்ததேவி வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் தொன்மை மிக்கதாகும். சங்க காலம் தொடங்கிசோழர் காலம் வரையில் இந்த வழிபாடு இருந்து வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நன்னாடு, பேரங்கியூர், பிடாகம்,திருவாமாத்தூர், கொட்டப்பாக்கத்துவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூத்ததேவி சிற்பங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்ட இந்தச் சிற்பம் பிரம்மதேசம் வரலாற்றுக்குப் புதிய வரவாகும். இந்தச் சிற்பத்தை உரிய முறையில் பாதுககாக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.