Published : 06 Jan 2023 04:53 PM
Last Updated : 06 Jan 2023 04:53 PM

அலாஸ்கா - ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம்: கின்னஸில் இடம்பெற்ற பறவையும், வியத்தகு பின்புலமும்!

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பறவை | கோப்புப் படம்

சாதனைகள் மனிதர்களுக்கு புதியது, பெரியது ஆனால் வானத்துப் பறவைகளுக்கும், கானகத்து விலங்குகளுக்கு அவை பொருட்டே இல்லை. ஏனெனில் தங்களை நிரூபிக்க மனிதனைத் தவிர எந்த ஓர் உயிரினமும் எத்தனிப்பதில்லை. ஒரு பறவை அதன் போக்கில் நிற்காமல் 8 ஆயிரத்து 435 மைல்கள் பயணித்திருப்பதை புதிய சாதனை என்று பட்டியலிட்டுள்ளது ‘தி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு.

இது எப்படி சாத்தியமானது? - பறவைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வலசை செல்வது காலங்காலமாக நடக்கும் ஒரு செயல். ஐரோப்பிய ஹார்ன் பில்கள் வேடந்தாங்கலுக்கு வந்து சேர்வதும் அதனால்தான். அப்படி வலசை செல்லும் பழக்கம் கொண்ட பார் டெய்ல்ட் காட்விட் (Limosa lapponica) என்ற பறவையினத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பறவையின் உடலில் வைத்திருந்த சிப் மூலம் இந்த சாதனை அம்பலமாகியுள்ளது.

அலாஸ்காவில் புறப்பட்ட "234684" என்ற டேக் எண் கொண்ட அந்த பறவை 11 நாட்களில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியாவை அடைந்தது. இந்தப் பயணத்தின்போது இந்தப் பறவை 13,560 கிலோ மீட்டரைக் கடந்துள்ளது. அதுவும் உணவுக்காகவோ, ஓய்வுக்காகவோ எங்குமே நிற்காமல் பறந்துள்ளது. இந்தப் பறவை கடந்த தூரத்தை ஒப்பிட்டால் அது லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு இரண்டரை முறை சென்றுவருவதற்கு சமம் எனத் தெரிகிறது.

பறவையின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த 5ஜி சாட்டிலைட் டேக் அதன் பயணத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுப் பயணம் கடந்த அக்டோபர் 13, 2022ல் தொடங்கி சரியாக 11 நாளில் முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக இதே காட்விட் இனத்தைச் சேர்ந்த பறவை 217 மைல் பறந்திருந்ததுதான் சாதனையாக பதிவாகியிருந்தது. இப்போது மீண்டும் அதே இனத்தின் பறவை இன்னொரு சாதனையை செய்துள்ளது.

சாதனைப் பறவையின் இந்த சாதனை குறித்து பர்ட்லைஃப் டாஸ்மேனியாவின் ஆராய்ச்சியாளர் எரிக் ஹோலர், "இந்தப் பறவை தனது ஓய்வற்ற பயணத்தால் தனது எடையில் பாதியை இழந்துள்ளது" என்றார்.

* பார் டெய்ல்ட் காட்விட் பறவைகள் வலசைப் பறவைகளில் சாம்பியன்களாக கருதப்படுகின்றன.
* இலையுதிர் காலத்தில் இந்தப் பறவைகளால் 9 நாட்கள் இடைவிடாது பயணிக்க முடியும். அதாவது உணவு, தண்ணீர், தூக்கம் என ஏதுமில்லாமல் பயணிக்க முடியும்.
* பயணித்திற்கு முன்னர் இந்தப் பறவைகள் தங்களின் உடல் எடையை இருமடங்கு அதிகரித்துக் கொள்ளுமாம். அப்படி அதிகரித்தால் தான் அது பயணிக்க ஏதுவான சக்தி அதற்கு கிடைக்குமாம்.
* பறக்கும்போது மூளைத் திறனை பாதியாக சுருக்கிக் கொண்டு அதன் மூலம் தேவையான உந்துசக்தியை பெற்றுக் கொள்ளுமாம்.
* இப்போதைக்கு உலகில் வெறும் ஒன்றாரை லட்சம் காட்விட்கள் தான் இருக்கின்றன.
* அருகி வரும் ஈரநிலங்கள் இவற்றை அழித்துவருகின்றன. இந்த பறவைகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியான பல உயிரினங்களை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதும், அழித்தேவிட்டதும் தான் பெரும்பாலான மனிதர்களின் செய்த சாதனையாக உள்ளது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்ற புரிதல் தான் காலத்தின் அவசியமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x