Last Updated : 28 Dec, 2022 04:35 AM

 

Published : 28 Dec 2022 04:35 AM
Last Updated : 28 Dec 2022 04:35 AM

பருவ நிலை மாற்றத்தால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிப்பு: கிருஷ்ணகிரி மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

கிருஷ்ணகிரி திருநீலகண்டர் தெருவில் பொங்கல் பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை, வெயிலின் தாக்கம் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி களிமண் எடுக்க முடியாத நிலை காரணமாக பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டிருப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு மண்பாண்ட பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தது. நாகரிக வளர்ச்சி காரணமாக மண்பாண்டப் பொருட்கள் பயன்பாடு அரிதாகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய முறையில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

அரிதும்..தேவையும்..: அரிதாக பயன்பாட்டில் உள்ள மண் பானைகள் பொங்கல் பண்டிகை காலங்களில் தேவை அதிகம் இருக்கும் என்பதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை விற்பனையை குறி வைத்து மண் பானை, அடுப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம், நவராத்திரி விழாக்களுக்கு தேவையான மண்பாண்டப் பொருட்களையும், நாற்றுகளுக்கு தேவையான சிறிய அளவிலான தொட்டிகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

50% பேர் இடம் பெயர்வு: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒவ்வொரு பகுதியிலும்100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இத்தொழிலில் போதிய வருவாய் இல்லாமல் 50 சதவீதம் பேர் வேலை வாய்ப்புக்காக வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். சிலர் மட்டும் குலத்தொழிலை கைவிட மனம் இல்லாமல் பல்வேறுஇடர்பாடுகளுக்கு இடையே மண்பாண்டத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டில் தொடர்ந்து பெய்த மழையால் பொங்கல் பானைகள், அடுப்புகள்தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டிருப் பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

களிமண் இல்லை: இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருநீலகண்டர்தெருவைச் சேர்ந்த தேவராஜ் கூறியதாவது: நிகழாண்டில் பெய்த தொடர் மழையால், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி உபரிநீர் வழிந்தோடுகிறது. இதனால், பானைகள் செய்ய தேவையான களிமண் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு வாங்கியதில் இருப்பில் உள்ள களிமண் மூலம் தற்போது பானைகள் செய்து வருகிறோம்.

அதுவும் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளதாலும் பானைகள் தயாரிக்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு வாரங்கள் உள்ளநிலையில் அதற்குள் தேவையான அளவு பானைகள், அடுப்புகள், உள்ளிட்டவை தயாரிக்க முடியுமா என தெரியவில்லை.

விலை அதிகரிக்கும்: மேலும், சாரல் மழை தொடர்வதால் தயாரிக்கப்பட்ட மண்பாண்ட பொருட்களை சூளையில் வைத்து சுட வைக்க முடியவில்லை. காயாத பானைகள் சூலையில் வைத்தாலும், அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக, பொங்கல் பானை தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பும், பானை விலை உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x