எஸ்ஐ பணிக்கு மகளுடன் போட்டி போடும் தாய்

தாயார் நாகமணியுடன் மகள் திரிலோகினி.
தாயார் நாகமணியுடன் மகள் திரிலோகினி.
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி (37). எஸ்.சி. பிரிவை சேர்ந்த இவருக்கும் விவசாய கூலி தொழிலாளி வெங்கண்ணா என்பவருக்கும் திருமணம் நடந்து, இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியராகவும், இதனை தொடர்ந்து, விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள காரணத்தினால் கணவரின் ஒத்துழைப்போடு இவர் கோகோ, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் நாகமணி, மாநில, தேசிய அளவில் விளையாட்டில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்றுள்ளார்.

இதனிடையே கடந்த 2007-ல், ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2020-ல் பெண் கான்ஸ்டபிளாக பணியில் இணைந்தார். இவர் தற்போது தெலங்கானா மாநிலம், முலுகு போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தாயைப் போலவே தானும் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டுமென நாகமணியின் மகள் திரிலோகினியும் பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, போலீஸாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தெலங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) பணிக்கான தேர்வு நடந்தது. இதற்கு தாயும், மகளும் ஒன்றாக விண்ணப்பித்தனர். பல நூற்றுக்கணக்கானோருடன் தாயும், மகளும் போட்டிபோட்டுக் கொண்டு இதில் பங்கேற்றனர். இதனை அறிந்த பலர் ஆச்சரியப்பட்டனர். இருவரும், உடல்தகுதியில் தேர்வாகிவிட்டனர்.

நீளம் தாண்டுதல், 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இருவரும் தேர்வாகி அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளனர். அடுத்ததாக எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து நாகமணி கூறும்போது, "இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். மகளுடனே போட்டி போடும் நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்யவேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும்.

இருவரும் விரைவில் சப் -இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் எனும் நம்பிக்கை உள்ளது. எவ்வளவு இருந்தாலும் அவள் எனக்கு போட்டியாளர்தான்" என கூறி சிரித்தார். இவர்களில் யார் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்கள்? அல்லது இருவருமே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குத் தேர்வாகி விடுவார்களா? என அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in