Published : 12 Nov 2022 07:51 PM
Last Updated : 12 Nov 2022 07:51 PM

மழை விடுமுறை: 2கே கிட்ஸின் அலப்பறைகளும், 90ஸ் கிட்ஸின் காத்திருப்பும்! 

தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டால் குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டத்திற்கு முக்கியக் காரணம் பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு. தங்களது பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிட்டாலே "சாமி நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு விடணும்" என்று கடவுளை வேண்டுவதும், லீவு விட்ட பிறகு “ஹய்யா ஜாலி” என்று துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதிலும் அனைத்து கிட்சுகளும் ஒன்றாகதான் உள்ளனர்.

ஆனால், இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அறிந்துகொள்ள ட்விட்டரையும், இன்ஸ்டாகிராமையும் அதகளப்படுத்தி வருகின்றனர் இந்த 2கே கிட்ஸ். மழை பெய்ய தொடங்கியமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர்களை டேக் செய்து வடிவேலு பாணியில், "லீவு எப்ப சார் வீடுவீங்க" என்று கேட்கத் தொடங்கி விடுகின்றனர் 2கே கிட்ஸ்கள்.

சில நாட்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பள்ளிகளுக்கு லீவு விடக் கோரி இன்ஸ்டாவில் மாணவர்கள் அனுப்பி மெசேஜ்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இருந்தார். அவற்றில் சில...

"மேடம் மார்க் வாங்கலன்னா எல்லாரும் கேட்பாங்க மேடம், லீவ் மேடம், உங்களையே நம்பி இருக்கேன் மேடம், உதவி செய்யுங்கள்... எனக்கு மட்டும் இல்லை மேடம், எல்லோருக்கு ஒருநாள் லீவ் மேடம்."

"நாளைக்கு மட்டும் லீவ் இல்லைன்னா பைத்தியம் ஆயிருவேன் போல. லீவ் மட்டும் விடுங்க மேடம் உங்களுக்கு கோயில் கட்டுறேன். என் மனசுல படிச்சு படிச்சு பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு மேடம்"

"செல்லம் நாளைக்கு லீவ்"

"ஹெவி ரெயின் மேடம்... கொஞ்சம் லீவ் விடுங்க, பளீஸ்"

இவ்வாறு திங்கள்கிழமை லீவு விட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே மாணவர்கள் இன்ஸ்டாவில் மெசேஜ்களை தட்டி விட்டு இன்பாக்ஸை நிரப்பிக் கொண்டு இருந்தனர்.

இதைப்போன்று மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் லீவு கேட்க, அதற்கு மாவட்ட ஆட்சியர், “பாலே இங்கு தேறல, பாயாசம் கேக்குதா, Rain No, School Yes” என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கடந்த நவ.2-ம் தேதி, தனது சமூக வலைதளத்தில், நாளை விடுமுறை வாய்ப்புகள் மிகவும் குறைவு. குழந்தைகள் ஹாட்ரிக் விடுமுறை எதிர்பார்க்க வேண்டாம். வீட்டுப் பாடத்தை முடிந்து தயாராக இருங்கள்" என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு மாணவர்கள் சிலர்...

"பள்ளி மாணவர்களின் வில்லன் பிரதீப் ஜான்"

"காஞ்சிபுரம் லீவு விடுங்க... இல்லை, வெதர் மேன் ரத்தம் கக்கி சாவன்"

இப்படியெல்லாம் கமெண்ட் செய்து இருந்தனர்.

இதை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், "தற்போதைய 2கே கிட்ஸ்கள் மிக மோசம். என்னிடம் விடுமுறை குறித்து எதுவும் கேட்க வேண்டாம். ஆட்சியர்களின் வீடுகளின் முன்பு டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தால், அவர்கள் விடுமுறை விடுவார்கள்" எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மழை பெய்யும் நாள் அன்று சமூக வலைதளங்களின் அலப்பறைகளை அரங்கேற்றி கொண்டுள்ளனர் இந்த 2கே கிட்ஸ்.

இந்த 2கே கிட்ஸ் உடன் எப்போது ஒப்பீடு செய்யப்படும் 90'ஸ் கிட்ஸ்கள் காலை வரை காத்திருந்து விடுமுறை அறிவிப்பை தெரிந்து கொண்டனர் என்பது இந்த 2கே கிட்ஸ்களுக்கு தெரியாத உண்மை.

90'ஸ் கிட்சுகளின் காலத்தில் இவ்வளவு சமூக வலைதளங்கள், செய்தி தொலைக்காட்சிகள் எல்லாம் கிடையாது. மழை பெய்தால் யாரிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு வரும், எப்போது வரும் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. காலை எழுந்து, "அம்மா இன்னைக்கு மழை பெய்யுது. இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவுதான் இருக்கும். நான் சைக்கிள் எடுத்துட்டு போய் பாத்துட்டு வரவா" என்று கேட்பார்கள்.

ஆனால், அம்மாக்கள், "நீ பார்த்துட்டு எல்லாம் வர வேண்டாம். பேக்கை எடுத்துட்டு ஸ்கூலுக்கு போ, லீவுன திரும்பி வந்துரு" என்பார்கள்.

இதன்பிறகு வேண்டா வெறுப்பாக பையை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு சென்று, ஸ்கூல் வாசலில் இருக்கும் இன்றைக்கு விடுமுறை என்ற அறிவிப்பு பலகையை பார்த்த பின்பு தான் 90'ஸ் கிட்ஸ்களின் முகத்தில் சிரிப்பே வரும்.

இதை எல்லாம் பார்க்கும்போது சூரியவம்சம் படத்தில் ராதிகா சரத்குமார் பேசும் வசனம்தான் மனதில் வந்து செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x