Published : 24 Oct 2022 06:54 AM
Last Updated : 24 Oct 2022 06:54 AM

100% இந்தி மொழியறிவு பெற்ற கேரள கிராமம்

கேரளாவின் சேலனூர் கிராமத்தில் இந்தி கற்கும் மக்கள் | கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சேலனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக சேலனூர் விளங்குகிறது. கிராமத்தின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் இந்துக்கள்.

23 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தற்போது சேலனூர் பஞ்சாயத்து தலைவராக பி.பி.நவுசீர் உள்ளார். கடந்த ஆண்டில் பஞ்சாயத்து சார்பில் கிராம மக்களின் இந்தி மொழி அறிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 700-க்கும் மேற்பட்டோருக்கு இந்தி தெரியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குடியரசுத் தினத்தின் போது பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இந்தியை கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் 2 இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் பலனாக தற்போது கிராமத்தில் உள்ள அனைவரும் இந்தியில் எழுத, படிக்க, பேச கற்றுக் கொண்டுள்ளனர். வரும் குடியரசு தினத்தின்போது சேலனூர் கிராமம் 100 சதவீத இந்தி மொழியறிவு பெற்ற கிராமமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நவுசீர் கூறும்போது, “வட மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களோடு பேசி, அவர்களை பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த இந்தி மொழியறிவு அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டே இந்தி கற்பிக்கும் திட்டத்தை தொடங்கினோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x