Published : 23 Oct 2022 04:55 AM
Last Updated : 23 Oct 2022 04:55 AM

வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்கள் விரைவில் தேர்வு

கரூர்: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும், நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் மாநில நூலகம் மற்றும் 30-க்கும் அதிகமான மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என 4,000-க்கும் அதிகமான நூலகங்கள் உள்ளன. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும் நூலகம்செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகும், நூலகங்களுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, முதியவர்களுக்கு நூலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிந்தது.

இந்தநிலையில், நூலக வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நூலகங்களுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிடோர், வீடுகளில் இருந்தே நூல்களை வாசிக்க உதவும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 60 சதவீத நூலகங்களில் தலா 5 தன்னார்வலர்களை நியமித்து, அவர்கள்வீடு, வீடாகச் சென்று நூல்களைவழங்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். வீடுகளுக்குச் செல்லும்போது நூலக உறுப்பினர்களாக இல்லாதவர்களை, உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் இவர்கள் மேற்கொள்வர். நூலக வார விழா நவ.14-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அன்றே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் 2,500நூலகங்கள், நூலக நண்பர்கள்திட்டத்துக்காக தன்னார்வலர்களைக் கண்டறியும் பணியை விரைவில் தொடங்கவுள்ளன. இதன்படி, கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 103 நூலகங்களில் 60 நூலகங்களில் நூலக நண்பர்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படஉள்ளது. இதற்காக, வாசிப்பில் ஆர்வமுள்ள 300 தன்னார்வலர்களைக் கண்டறிவது தொடர்பாக அந்தந்த நூலகர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைவோருக்கு அடையாள அட்டை, புத்தகங்களை எடுத்துச் செல்ல பை ஆகியவை வழங்கப்படும். முதலில் 50 நூல்கள் வழங்கப்பட்டு, அவற்றை விநியோகித்த பிறகு மீண்டும் நூல்கள் வழங்கப்படும். இவ்வாறு மாதத்துக்கு 2 முறை நூல்கள் வழங்கப்படும்.

நூலகத்தில் இருந்து நூல்களைப் பெற்று சென்று நூல்களை விநியோகிப்பது, விநியோகித்த நூல்களைத் திரும்பப் பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் கூறியது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நூலக நண்பர்கள் திட்டம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, இந்தத் திட்டம்செயல்படுத்தப்படவுள்ள நூலகங்களின் நூலகர்களுக்கு, தன்னார்வலர்களைத் தேர்வு செய்ய அறிவுறுத்தி விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. நன்கு செயல்படும் தன்னார்வலர்களுக்கு நூலக வார விழாவில் பரிசு வழங்கப்படும் என்றார்.

நூலக உறுப்பினர்களாக இல்லாதவர்களை, உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் இவர்கள் மேற்கொள்வர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x