Published : 17 Oct 2022 11:44 AM
Last Updated : 17 Oct 2022 11:44 AM

‘நம்மை காப்போம் 48' திட்டத்தால் குறையும் விபத்து மரணங்கள் | உலக உடற்காய தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக். 17-ம்தேதி உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் மரணம் மற்றும் ஊனத்துக்கான முக்கியக் காரணம் உடற்காயம் ஆகும்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் உடல் காயங்களால் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். 2 கோடி பேர் உடற்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சாலை விபத்துகளில் ஏற்படும் உடற்காயத்தை தவிர்க்கவும், விபத்து ஏற்பட்டால் மிகவும் காயமடைவோர் உயிரைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உணர்த்தவே இந்த உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுத் துறைத் தலைவர் கேபி.சரவணகுமார் கூறியதாவது:

உலகில் விபத்துகளில் இறக்கக் கூடியவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் தமிழகம் முதல் 2 இடங்களில் மாறி மாறி வருகிறது. ‘நம்மை காப்போம் 48 மருத்துவத் திட்டம்' வந்த பிறகு, தற்போது விபத்து மரணங்கள் குறையத் தொடங்கி உள்ளன. மக்களிடம் விபத்துக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் விபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விபத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தனி துறைத் தலைவர் தலைமையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டது. இத்துறைக்கென செவிலியர், மருத்துவப் பணியாளர் குழுவும் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் துறை ‘ஜீரோ டிலே’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறது.

விபத்தில் காயமடைவோர் வந்தவுடனேயே அனைத்து சிறப்பு மருத்துவர்கள், உபகரணங்களும் ஒரே இடத்தில் வைத்து உயிரை காப்பதே இத்துறையின் தலையாய நோக்கம். தேவைப்படுவோருக்கு அடுத்த 6 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மருத்துவர்கள் ஒருபுறம் இதுபோல காயமடைவோருக்கு தாமதமின்றி சிகிச்சை அளித்தாலும் மறுபுறம் பொதுமக்களும் உடற்காயம் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு பெறுவது முக்கியம்.

அதனால், இந்தத் தினத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறை மூலம் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒருவர் தன்னையும், மற்றவர்களையும் காப்பாற்றுவதாகும். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை மதிப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் விளக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x